தானே பேசி தானே வெளிநடப்பு செய்த ஜெ- கருணாநிதி தாக்கு
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று, அதற்கு முதலமைச்சர் என்ற முறையில் நான் பதிலளிக்கும் நாளன்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஜெயலலிதா அன்று ஒரு நாள் மட்டும் பேரவைக்கு வருகை தந்தார்.
விவாதத்தில் தங்கள் கட்சியின் சார்பிலே பேசுவதாகத் தெரிவித்து, அப்போது தேவையில்லாமல் அவை முன்னவர் பேராசிரியர் அவர்களையும், பொதுப்பணி மற்றும் சட்டத் துறை அமைச்சர்
துரைமுருகனையும், தலைமைச் செயலாளரையும் தரக்குறைவான முறையில் விமர்சித்தார்.
அதையொட்டி பேரவையிலே கலவரத்தை ஏற்படுத்துகின்ற வகையிலே பேசிட, அதற்கு என்ன பதில் வருகிறது என்பதைக் கூட கேட்கக் கூடத் தயாராக இல்லாமல், தானே பேசி விட்டு, எந்தவிதமான காரணமும் இல்லாமல் தானே வெளி நடப்பு செய்வதாகக் கூறிவிட்டு அவரும், அவரது கட்சியினரும் வெளி நடப்பு செய்தார்கள்.
இந்தப் பிரச்சினை காரணமாக அவையின் நேரம் மிகுதியாக எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டதால், ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு மற்றவர் பேசியதற்கெல்லாம் முதல்- அமைச்சர் என்ற முறையில் என்னால் பதிலளிக்க நேரமில்லாமல் போய்விட்டது.
எனவே அந்த விவாதத்திலே கலந்து கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும், தோழமைக் கட்சி நண்பர்களும் எழுப்பிய பல்வேறு பிரச்சினைகளுக்கும் நான் பதில் கூறுவதற்காக குறித்து வைத்திருந்த கருத்துக்களை கடிதங்கள் வாயிலாக அளித்து வருகிறேன்.
குறிப்பாக அண்மையில் நமது மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ரூ.1,510 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், மாநில அரசு ரூ.200 கோடியை மட்டுமே வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்கியுள்ளதாக அதிமுக உறுப்பினர் ஒருவர் அவையில் நடந்த விவாதத்தின்போது குறிப்பிட்டார்.
அதற்கு அரசு சார்பில் என்ன பதில் அளிக்கப்படுகிறது என்பதைக் கூடத் தெரிந்து கொள்ள அக்கறையின்றி, அவர் தலைவியின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வெளிநடப்பு செய்துவிட்டார். எனினும் அவர் எழுப்பிய கேள்விக்கு அரசு சார்பில் நான் அளிக்கும் விளக்கம் அளிக்கிறேன்.
இதோ அந்த விளக்கம்:
வெள்ளச் சேதங்களை சரி செய்வதற்கான பணிகள் இரு வகைப்படும். ஒன்று - ஏற்பட்டுள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைத்தல் மற்றும் வெள்ள நிவாரணம் வழங்குதல் ஆகிய உடனடிப் பணிகள். மற்றொன்று -பாதிக்கப்பட்ட இடங்களை நிரந்தரமாக சீரமைப்பதற்கான பணிகள்.
இவற்றில், நிரந்தர சீரமைப்புப் பணிகள் மாநில அரசின் திட்டப்பணிகள் மூலமாக அரசின் சொந்த நிதியிலிருந்து படிப்படியாக மேற்கொள்ளப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடிப் பணிகளை மேற்கொள்ளவும், நிவாரணம் அளிக்கவும், 12வது நிதிக் குழுவின் பரிந்துரையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள மாநில இயற்கைப் பேரிடர்
நிவாரண நிதியிலிருந்து செலவுகள் மேற்கொள்ளப்படும்.
இதிலிருந்து பெறப்படும் நிதியானது, உடனடிப் பணிகளுக்கும், நிவாரணத்திற்கும் போதாதிருப்பின், மாநில அரசின் கோரிக்கையின் அடிப்படையில் தேசிய பேரிடர் அவசர உதவி நிதியிலிருந்து மத்திய அரசு மேலும் நிதி உதவி அளிக்கும்.
2007-2008ஆம் ஆண்டிற்கு தமிழ்நாட்டின் மாநில இயற்கைப் பேரிடர் நிவாரண நிதிக்கான ஒதுக்கீடு ரூ.231 கோடியாகும். இதிலிருந்து உடனடிப் பணிகளுக்காக ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உடனடி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது போக, தேசிய பேரிடர் அவசர உதவி நிதியிலிருந்து மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று மாநில அரசு கோரியுள்ளது.
இவ்வாறிருக்க, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பிற்கு மாநில அரசு தேவையான நிதியை ஒதுக்கவில்லை என்றும் மாநில அரசின் மற்ற திட்டங்களுக்கான நிதியை இப்பணிகளுக்கு பயன் படுத்தினால் மட்டுமே இப்பணிகளை மேற்கொள்ள இயலும் என்றும் அதிமுக உறுப்பினர்கள் தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானதாகும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.