சரத் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் - ராதிகா
மதுரை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று சரத்குமாரின் மனைவி ராதிகா கூறியுள்ளார்.
சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாடு மதுரையில் பிப்ரவரி 10ம் தேதி (நாளை) நடைபெறுகிறது. விரகனூர், சுற்றுச்சாலையில் இதற்காக பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. மேடையும் போடப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை சரத்குமாரும், ராதிகாவும், கட்சி நிர்வாகிகளோடு நேற்று பார்வையிட்டனர். பின்னர் ராதிகா செய்தியாளர்களிடம் பேசுகையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். அரசியல் 33 சதவீத இட ஒதுக்கீடு கோரி பெண்கள் போராடி வருகிறார்கள்.
முதல்வர் கருணாநிதிக்கும் மாநாட்டு அழைப்பிதழை அனுப்பியுள்ளோம். அவர் அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்படும் தலைவர். அதேபோல மற்ற முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பியுள்ளோம்.
நான் எனது கணவரை பின்னாலிருந்து இயக்குவதாக கூறுவது தவறு. அவருக்கு பக்க பலமாக நான் இருக்கிறேன். எப்போதும் அவருக்கு உறுதுணையாக இருப்பேன்.
தேர்தல் பிரசாரத்தில் நான் ஈடுபடுவது குறித்து இப்போது யோசிக்கவில்லை. தேர்தல் வரும்போதுதான் அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றார் ராதிகா.