காதலர் தினத்திற்கு எதிர்ப்பு- நாய்களுக்கு திருமணம் நடத்திய இந்து மகா சபை
திருச்சி: காதலர் தினத்தை முன்னிட்டு திருச்சி மலைக் கோட்டையில் குவிந்த காதலர்களை தாலியை காட்டி இந்து முன்னணியினர் விரட்டியடித்தனர்.
திருச்சி மலைக்கேட்டை காதலர்கள் கூடும் இடமாக இருந்து வருகிறது.
இந் நிலையில் நேற்று காதலர் தினத்தன்று ஏராளமான காதலர்கள் இங்கு குவிந்தனர். அப்போது அங்கு வந்த தாலிக் கயிறுகளுடன் வந்த இந்து முன்னணியினர் காதலர்களிடம் போய் தாலியை நீட்டி, உங்களது காதல் உண்மையானது என்றால் இங்கேேய இந்த நிமிடத்தில் தாலி கட்டுங்கள் என்று மிரட்டினர்.
சிலர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மற்றவர்கள் அங்கிருந்து ஒட்டம் பிடித்தனர்.
இந்து முன்னணியின் இந்தச் செயலுக்கு தலித் விடுதலை இயக்கம் கடும் கண்டனம் ெதரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கூறுகையில்,
காதல் என்பது தனி மனித உரிமை. காதலால் தான் ஜாதி அற்ற உலகத்தை படைக்க முடியும். அடுத்தவர் காதல், திருமணத்தில் தலையிடுவற்கு இந்து முன்னணி அமைப்பினருக்கு எந்த உரிமையும் இல்லை.
மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு வந்த காதலர்களை தடுத்து இம்சை செய்த இந்து முன்னணியினர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.
நாய்களுக்கு திருமணம்:
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து மகா சபையினர் சார்பில் நாகர்கோவிலில் நாய்களுக்கு நேற்று திருமணம் செய்து வைக்கப்பட்டது.
காதலர் தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தை கண்டித்து குமரி மாவட்ட இந்து மகா சபை சார்பில் நேற்று நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
ஆண் நாய், பெண் நாய் இரண்டையும் பிடித்து குளிக்க வைத்து, ஒரு பியூட்டி பார்லருக்கு கொண்டு சென்று முடிகளை திருத்தி அழகு செய்தனர்.
பின்னர் மாலை அணிவித்து இரண்டு நாய்களையும் ஊர்வலமாக அழைதது வந்தனர். காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் பீச் ரோட்டில் புரோகிதர்கள் மந்திரங்கள் ஓத மேள தாளங்கள் முழங்க இரண்டு நாய்கள் கழுத்தில் கிடந்த மாலைகளும், மாற்றப்பட்டு, திருமணம் நடந்தது.
பின்னர் அவை ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டன. ஆண் நாய்க்கு கருப்பு கலரில் சட்டையும், பெண் நாய்க்கு கருப்பு கலரில் சேலையும் அணிவித்து படு ஜோராக அவற்றை அலங்கரித்திருந்தனர்.
ஆண் நாயின் கையில் (காலில்) தாலியை கொடுத்து பின்னர் அதை வாங்கி பெண் நாய் கழுத்தில் அணிவித்தனர்.
இதற்கிடையில் நெல்லை மாவட்ட சிவசேனா கட்சி தலைவர் முத்தையா தலைமையில் அக்கட்சியினர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிதது ஜங்ஷன் பஸ் நிலையம் அருகே காதலர் தின வாழ்த்து அட்டைகளை எரிக்க முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications