சுனாமி நிவாரண வீடுகளை இடிக்க உச்சநீதிமன்றம் தடை
டெல்லி: நாகை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டப்பட்ட வீடுகளை இடிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நாகை மாவட்டம், உழவர் நகர், வடக்கு பொய்கைநல்லூரை சேர்ந்தவர் சுப்பையன். இவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார்.
அதில், கடந்த 2004ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள கடலோர பகுதிகள் சுனாமியால் தாக்கப்பட்டது. இதில் நாகை மாவட்டம் உழவர் நகர், வடக்கு பொய்கை நல்லூரில் ஏராளமான வீடுகள் இடிந்தன. அங்கு விவசாய கூலிகளான ஆதி திராவிடர்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.
இவர்களுக்கு புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க 13.09.2005 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு உழவர் நகரில் 44 வீடுகள் கட்டப்பட்டன. தனியார் நிறுவனம் ஒன்று இந்த வீடுகளை கட்டியது.
இந்த நிறுவனம் கட்டிய வீடுகள் அனைத்தும் தரமற்ற நிலையில், இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளன. 13 பேர் மட்டும் அந்த வீடுகளில் குடியேற அரசிடம் இருந்து சாவிகளை பெற்றனர். ஆனால் 44 வீடுகளும் ஒதுக்கப்பட்டவர்கள் அதில் குடியேற வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறார்கள்.
அந்த வீடுகள் தரமற்றவையாகவும், அபாயகரமானதாகவும் உள்ளது என்று அரசுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, இந்த தரமற்ற வீடுகளை அகற்றி விட்டு, புதிய வீடுகளை நல்ல முறையில் கட்டிக் கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து 44 வீடுகளையும் இடிக்க உத்தரவிட்டனர்.
மேலும், நாகை மாவட்டம் உழவர் நகர், வடக்கு பொய்கைநல்லூரில் சால்வேஷன் ஏஜென்சி, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 44 வீடுகளை கட்டி கொடுத்துள்ளது. நாகை கலெக்டர் இதற்கான அனுமதி வழங்கியுள்ளார்.
அந்த வீடுகள் தரமானதாக இல்லை என்றும், குடியிருக்க தகுதி அற்றது என்றும் தலைமை என்ஜினீயர் இந்த நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். ஆகவே இந்த 44 வீடுகளையும் கட்டிய நிறுவனமே இடிக்க வேண்டும். இடிக்கப்பட்ட இடிபாடுகளை அந்த நிறுவனமே தனது சொந்த செலவில் அகற்ற வேண்டும்.
மாவட்ட கலெக்டரும், தலைமை செயலாளரும் அந்த இடத்தை கையகப்படுத்தி மீண்டும் தரமான வீடுகளை கட்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். தரமாக கட்டப்படுகிறதா என்பதை குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.
தற்போது அந்த வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு வசிக்க மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும். 2 மாத காலத்திற்குள் இடித்து அப்புறப்படுத்திய பிறகு, தலைமைச் செயலாளரும், மாவட்ட கலெக்டரும் இந்த நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி இருந்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சால்வேஷன் ஏஜென்சி மற்றும் எம்.ராமச்சந்திரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது.
44 வீடுகளையும் இடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஏ.சுப்பையன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications