சீனிவாஸ் கொலை வழக்கு-முத்துலட்சுமிக்கு பிடிவாரண்ட்!
இதையடுத்து முத்துலட்சுமி தலைமறைவாகி விட்டார். முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
சாம்ராஜ் நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகாவுக்குட்பட்ட நாமதல்லி வனப்பகுதியில், 1991ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி கர்நாடக வன அதிகாரி சீனிவாஸ் வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அவரது தலையையும் துண்டித்தான் வீரப்பன்.
இந்த சம்பவம் நடந்த போது அந்த இடத்தில் முத்துலட்சுமியும் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கொள்ளேகால் நீதிமன்றம், சாட்சி சொல்ல வருமாறு முத்துலட்சுமிக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் ஒருமுறை கூட முத்துலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து கொள்ளேகால் நீதிமன்றம் முத்துலட்சுமிக்கு ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட்டைப் பிறப்பித்துள்ளது. இதையடுத்து தலைமறைவாகி விட்டார் முத்துலட்சுமி. தனது வழக்கறிஞர் வெங்கடேஷ் நாயக் மூலம் முன்ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு கொள்ளேகால் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.
நடந்தது என்ன?:
1990ல் மாலே மாதேஸ்வரன் மலை பிராந்திய வன அதிகாரியாக நியமிக்கப்பட்டார் சீனிவாஸ். வீரப்பனைப் பிடிப்பதை சபதமாக ஏற்று செயல்பட்டு வந்தார்.
பி.ஆர். ஹில்ஸ் மலைப் பகுதிக்கு அருகே உள்ள பூதி பாடகா கெஸ்ட் ஹவுஸ் அருகே வீரப்பன் நடமாட்டத்தை அறிந்த சீனிவாஸ் அங்கு முகாமிட்டார்.
வீரப்பனைக் கைது செய்வதற்குப் பதில் அவனைத் திருத்த வேண்டும் என்று தீர்மானித்தார். இதற்காக, வீரப்பனின் சொந்த ஊரான கோபிநத்தம் சென்ற அவர் அங்கு கோவில் கட்டினார். கிளினிக் வர ஏற்பாடு செய்தார். நானும் உங்களில் ஒருவன் என்று கிராம மக்கள் உணர்வது போல செய்தார்.
அப்போது கோபிநத்தம் கிராமத்தில்தான் வீரப்பனின் தம்பி அர்ஜூனனும், தங்கை மாரியம்மாவும் வசித்து வந்தனர். அர்ஜூனனையும் தனது நட்பு வட்டாரத்திற்குள் இழுத்தார் சீனிவாஸ். அவருக்கும், மாரியம்மாவுக்கும் இடையே தொடர்பு இருந்ததாகவும் கூற கூறப்பட்டது.
இப்படி வீரப்பனுக்கு நெருக்கமான வட்டாரத்தை தனது வசப்படுத்தி வீரப்பனை நெருங்க முயற்சித்து வந்தார் சீனிவாஸ். இந் நிலையில்தான் மாரியம்மா தற்கொலை செய்து கொண்டார்.
தங்கையின் சாவால் கொதிப்படைந்த வீரப்பன், அதற்கு சீனிவாஸ்தான் காரணம் என தீர்மானித்து அவரைத் தீர்த்துக் கட்ட தீர்மானித்தான்.
இதையடுத்து 1991ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி தானும், தனது கும்பலும் சரணடைய விரும்புவதாக ஆட்கள் மூலம் சொல்லி அனுப்பினான். சந்தோஷமடைந்த சீனிவாஸ் காட்டுக்குள் சென்றார். அவருடன் இரண்டு போலீஸ் உளவாளிகளும் உடன் வந்தனர். அவர்களை வீரப்பனின் கூட்டாளி ஒருவன் உள்ளே அழைத்துச் சென்றான்.
அரகே ஹல்லா என்ற இடத்தை நோக்கி அவர்கள் பயணப்பட்டனர். வழியில் அர்ஜூனனும் சேர்ந்து கொண்டான்.
அரகே ஹல்லாவை அடைந்ததும் அங்குள்ள ஆற்றில் குளிக்கலாம் என்று கூறவே சீனிவாஸும் ஒத்துக் கொண்டு குளித்தார். அப்போது வீரப்பன் வழிமறித்தான். சீனிவாஸை நேருக்கு நேர் வைத்து சுட்டுக் கொன்றான். பின்னர் அவரது தலையை தனியாக துண்டித்தான்.
இந்த சம்பவங்கள் நடந்த போது அங்கு முத்துலட்சுமியும் இருந்துள்ளார். சீனிவாஸை சுட்டுக் கொன்றதையும், தலையை துண்டித்ததையும் அவர் நேரில் பார்த்துள்ளார் என்பதுதான் தற்போதைய வழக்கின் முக்கிய அம்சம்.