ஹைதராபாத் புதிய விமான நிலையம்: சோனியா திறந்து வைத்தார்
ஹைதராபாத்: இந்தியாவின் முதலாவது க்ரீன்பீல்டு விமான நிலையம் என்ற பெருமையைக் கொண்ட புதிய ஹைதராபாத் விமான நிலையத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஷாம்ஷாபாத்தில் தொடங்கி வைத்தார்.
ஹைதராபாத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷாம்ஷாபாத்தில், புதிய அதி நவீன வசதிகளுடன் கூடிய நாட்டின் முதலாவது தனியார், பொதுத்துறை கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜிஎம்ஆர் குழுமம், மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாத், இந்திய விமான நிலைய ஆணையகம், ஆந்திர அரசு ஆகியவை இணைந்து இந்த விமான நிலையத்தைக் கட்டியுள்ளன.
இந்தக் கூட்டுத் திட்டத்தில் ஜி.எம்.ஆர். நிறுவனத்தின் பங்கு 63 சதவீதமாகும். மலேசிய ஏர்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு 11 சதவீத பங்குகளும், இந்திய விமான நிலைய ஆணையகம், ஆந்திர அரசு ஆகியவற்றுக்கு தலா 13 சதவீத பங்குகளும் உள்ளன.
5400 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ரூ. 2470 கோடி செலவில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இங்குள்ள ரன்வே 4.36 கிலோ மீட்டர் நீளமுடையது. ஆசியாவிலேயே இதுதான் நீளமான ரன்வே ஆகும். மேலும் நாட்டிலேயே மிக உயரமான போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரமும் இங்குதான் உள்ளது. இங்கு 75 மீட்டர் உயரமுடைய கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
தெ. தேசம் எம்.எல்.ஏக்கள் போராட்டம்:
இதற்கிடையே, விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு என்.டி.ஆர் பெயரை வைக்கக் கோரி தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் விமான நிலையத்திற்குச் சென்று போராட்டம் நடத்த பெரும் திரளாக வந்தனர்.
அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீஸாருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே மோதல் மூண்டது. பின்னர் தெலுங்கு தேசம் கட்சியினரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications