ஆட்டோவில் 5 'குட்டீஸ்களுக்கு' அனுமதி!
சென்னை: ஆட்டோக்களில் 14 வயதுக்குட்பட்ட 5 சிறார்களை ஏற்றிச் செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆட்டோக்களில் தற்போது 3 பயணிகள் மட்டுமே செல்லலாம் என விதி உள்ளது. சிறுவர்கள் எத்தனை பேரை கூட்டிச் செல்லலாம் என்பது குறித்து தெளிவான விதி இல்லை.
இந்த நிலையில் சிறுவர்கள் 3 பேருக்கு மேல் ஆட்டோவில் சென்றால் போக்குவரத்துத் துறையினர் பிடிக்கின்றனர். இதுதொடர்பாக அரசுக்கு ஏராளமான புகார்கள் சென்றன.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989, பிரிவு 309-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஆட்டோக்களில் 3 பயணிகள் அல்லது 14 வயதிற்கு உட்பட்ட 5 குழந்தைகளை ஏற்றி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்போதுள்ள ஆட்டோக்களில் 3 பயணிகள் அல்லது 14 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்-சிறுமியரை ஏற்றிச் செல்லலாம். இது மோட்டார் வாகனச் சட்டப்படி அதிக பாரமாக கருதப்படாது என்று அரசு தெரிவித்துள்ளது.