விலைவாசி 'சர்'.. பிரதமர்-அமைச்சர்கள் இன்று முக்கிய ஆலோசனை
நாட்டின் பண வீக்க விகிதம் (Inflation) கடந்த 13 மாதங்களில் இல்லாத வகையில் 6.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் விலைவாசியும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இதையடுத்து பண வீக்கத்தையும் விலைவாசியையும் கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய மத்திய அமைச்சர்களுடன் இன்று பிரதமர் மன்மோகன் சிங் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
பண வீக்கத்தால் (சந்தையில் பணத்தின் பயன்பாடு அதிகமாக இருப்பது) நாடு முழுவதும் உணவு தானியங்கள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது.
பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தினால் தான் விலைவாசியை குறைக்க முடியும். பண வீக்கத்தை கட்டுப்படுத்த, முதலில் சந்தையில் உள்ள பணத்தைக் குறைக்க வேண்டும்.
அதற்கு வங்கிகளிடம் புழக்கத்தில் உள்ள நிதியை மத்திய அரசு கட்டுப்படுத்தியாக வேண்டும். இதனால் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் செலுத்தி வைக்க வேண்டிய நிதியை (CRR-Cash reserve ratio) அதிகரிக்க வேண்டும். இதனால் வங்கிகளிடம் இருக்கும் நிதி குறையும். வங்கிகளிடம் நிதி குறைந்தால் பொதுச் சந்தையில் பணத்தின் புழக்கம் குறையும்.
ஆனால், அதே நேரத்தில் இதனால் பொருளாதார வளர்ச்சி விகிதமும் பாதிக்கப்படும். விலைவாசியைக் கட்டுப்படுத்த பொருளாதார வளர்ச்சி வேகத்தை மட்டுப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.
விலையேற்றத்தால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் மத்திய அரசுக்கு எதிராக இடதுசாரி கட்சிகளும் பாஜக கூட்டணிக் கட்சிகளும் போர்க் கொடி உயர்த்தி வருகின்றன.
மேலும் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள தலைவர்களும் விலைவாசி உயர்வு குறித்து உடனே விவாதிக்க வேண்டும், அதற்காக கூட்டணிக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சோனியாவை வற்புறுத்தி வந்தனர்.
இந்த ஆண்டு கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் சட்டசபை தேர்தலையும் அடுத்த ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலையும் சந்திக்க வேண்டிய நிலையில் விலைவாசி உயர்வு மத்திய அரசை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் தேர்தல்களை குறி வைத்து தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டின் பலன்கள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று பிரதமருக்கு சோனியா அறிவுரை தந்துள்ளார்.
இதையடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளில் பிரதமரும் நிதியமைச்சர் சிதம்பரமும் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு கட்டமாகத் தான் வங்கிகளிடம் உள்ள நிதியை மட்டுப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
இது தவிர பிற நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு இன்று டெல்லியில் அவசரமாக கூடுகிறது.
இதில் விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார், நிதியமைச்சர் ப.சிதம்பரம், வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதில் சமையல் எண்ணை, பருப்பு வகைகள், அரிசி, கோதுமை போன்றவை தாராளமாக கிடைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்தால் அதை பெருமளவில் இறக்குமதி செய்வது குறித்தும் முடிவு செய்யப்படவு்ளது.
சோயாபீன்ஸ் எண்ணெய் இறக்குமதியை ஊக்குவிக்கும் வகையில் அதன் மீதான இறக்குமதி வரி 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்தவும் முடிவெடுக்கப்படலாம்.