ஏரிக்குள் விழுந்த ஜேம்ஸ் பாண்ட் கார்!
இச் சம்பவம் நேற்று முன் தினம் (சனிக்கிழமை, 19.04.08) நடந்தது.
1.2 லட்சம் பவுண்ட் மதிப்புள்ள இந்த ஸ்போர்ட்ஸ் கார், புதிய ஜேம்ஸ் பாண்ட் படமான குவாண்டம் ஆப் சோலாஸ் படத்துக்காக உருவாக்கப்பட்டது.
இங்கிலாந்து, பனாமா, சிலி, மெக்சிகோ என பல நாடுகளிலும் படப் பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது.
இத்தாலியின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்க இருந்தது. இதற்காக இந்த கார் விமானம் மூலம் இத்தாலி கொண்டு வரப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு நடக்க இருந்த லேக் கார்டா என்ற ஏரிப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.
படப் பிடிப்பு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தக் காரை ஸ்டண்ட் நடிகர் ஒருவர் ஏரியின் கரையோரத்தில் நிறுத்த முயன்றார். அப்போது கடும் மழை பெய்து கொண்டிருந்தது.
காரை அவர் ஓரம்கட்ட முயன்றபோது அது தவறி ஏரிக்குள் விழுந்துவிட்டது. இதில் அந்த ஸ்டண்ட் நடிகருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து அவரை மீட்டுவிட்டனர்.
ஆனால், கார் இன்னும் ஏரிக்குள் தான் கிடக்கிறது. இந்தப் படத்துக்காக ஒரே ஒரு ஆஸ்டின் மார்ட்டின் காரைத் தான் வடிவமைத்தனர். இதனால் மாற்று கார் இல்லாமல் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தக் கார் சம்பந்தமான காட்சிகளை ஒத்தி வைத்துவிட்டு வேறு காட்சிகளை படமாக்க ஜேம்ஸ் பாண்ட் படக் குழு முடிவு செய்துள்ளது.
டேனியல் கிரேக், ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள தயாரிப்பாளர்கள் இத்தாலியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஸ்பெயினில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த இருந்தனர்.
இந் நிலையில் கார் தண்ணீருக்குள் போய்விட்டது. இதையடுத்து புதிய காரை வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது.
007க்கு தண்ணீரில் கண்டம் போலிருக்கிறது...!!!













Click it and Unblock the Notifications