முகமலை தோல்வி: சிங்கள ராணுவ அதிகாரிக்கு கல்தா!
இலங்கையில் போர் உக்கிரமடைந்து வருகிறது. இதுவரை விடுதலைப் புலிகள் தரப்பில் பேரழிவை ஏற்படுத்தி வருவதாக ராணுவம் கூறி வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக ராணுவத்திற்கு பெருத்த அடி விழுந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
குறிப்பாக முகமலை, கிலாலி, மணலாறு உள்ளிட்ட பகுதிகளில் ராணுவத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
முகமலை பகுதியில் கடந்த புதன்கிழமை விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இப்பகுதி விடுதலைப் புலிகளுக்கு மிகவும் சாதகமான, பாதுகாப்பான பகுதியாகும். ஆனால் அதையும் மீறி முன்னேறிச் செல்ல ராணுவம் முயன்றது.
ஆனால் புலிகள் நடத்திய பதில் தாக்குதலில் 120க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியானார்கள். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பலர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர்.
முகமலை பகுதியை தற்போது விடுதலைப் புலிகள் இரும்புக் கோட்டை போல மாற்றி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் முகமலை போரில் ஏற்பட்ட பெரும் தோல்வி இலங்கை அரசுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சில அதிரடி நடவடிக்கைககளை அது மேற்கொண்டுள்ளது.
இலங்கை ராணுவத்தின் 53 மற்றும் 55-வது படை அணிகள் இந்த போரில் ஈடுபட்டன. இரு அணிகளிலும் சேர்த்து 5,000க்கும் மேற்பட்டோர் இருந்தனர். ஆனால் அவர்களை எதிர்கொண்ட விடுதலைப் புலிகள் தரப்பில் சில நூறு பேரே இருந்தனர்.
அப்படி இருந்தும் ராணுவம் அடி வாங்கியதற்கு, புலிகள் தோண்டி வைத்திருந்த பதுங்கு குழிகள்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. அதுகுறித்து அறியாமலும், விமானப் படையினரின் உதவியைக் கோராமலும், முன்னேறிச் சென்ற ராணுவம், பதுங்கு குழிகளுக்குள் சிக்கி மாட்டிக் கொண்டது.
இதையடுத்து 53வது பிரிவின் தலைமை அதிகாரி பிரிகேடியர் சமந்த சூரிய பண்டாரா அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரை அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரக பாதுகாப்பு அதிகாரியாக அரசு நியமித்துள்ளது.
புதிய தலைமை அதிகாரியாக பிரிகேடியர் கமல் குணரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது 55வது பிரிவின் தலைமை அதிகாரியாக இருந்து வருகிறார். 55வது பிரிவுக்கு பிரிகேடியர் பிரசன்னா சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
சமாதானம் மற்றும் ராகவன் ராக்கெட்!:
இதற்கிடையே, இந்த போரின்போது விடுதலைப் புலிகள் தரப்பில் சமாதானம் மற்றும் ராகவன் என்று பெயரிடப்பட்ட இரு வகையான புதிய ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை இரண்டும் ராணுவத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
இதில் ஒரு ராக்கெட்டில் பாஸ்பரஸ் துகள்களை அடைத்து வைத்து எறிந்துள்ளனர். இதனால் அது பற்றி எரிந்து ராணுவத்தினரை நிலை குலைய வைத்துள்ளது. இதனால்தான் ராணுவத் தரப்பில் பெருமளவில் உயிர்ச் சேதமும், கை, கால், கண் துண்டிப்பு போன்ற படுகாயங்களும் நிழ்ந்துள்ளன.
ராணுவத் தரப்பில் காயமடைந்த 121 பேர் ஜெயவர்த்தனபுர மருத்துவமனையிலும், 10 பேர் கண் மருத்துவமனையிலும் 35 பேர் தேசிய மருத்துவமனையிலும், 40 பேர் கொழும்பு ராணுவ மருத்துவமனையிலும் 128 பேர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பலரை புலிகள் சிறை பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.













Click it and Unblock the Notifications