நகராட்சி தலைவர் மீது நில அபகரிப்பு புகார்!
மதுரை: நிலத்தை அபகரித்து கொலை மிரட்டல் விடுத்த மதுரை அவனியாபுரம் நகராட்சி தலைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மதுரை மேல பெருமாள் மேஸ்திரி தெருவை சேர்ந்த தங்கராஜ் என்பவர் மதுரை புறநகர் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது தாயர் லலிதாவுக்கு சொந்தமான 3 ஏக்கர் 46 செண்ட் நிலம் வலையங்குளத்தில் உள்ளது.
இந்த நிலத்தை அபகரிக்க வலையங்குளம் செல்லன் மகன் அய்வன் தாசில்தாரிடம் போலி ஆவணங்கள் கொடுத்து பட்டா பெற முயற்சி செய்தார்.
இதையடுத்து உரிய ஆவணங்களை தாசில்தாரிடம் கொடுத்து அவர்களது மோசடியை அம்பலப்படுத்தினோம். இது சம்பந்தமாக வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது.
இந்த நிலையில் மதுரை அவனியாபுரம் நகராட்சி தலைவர் போஸ் முத்தையா, அய்வன் மற்றும் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் எங்களது நிலத்தில் புகுந்து மரங்களை வெட்ட முயன்றனர். அதை தடுத்த என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். எனவே எனது உயிருக்கு பாதுகாப்பு அளித்து நீதி வழக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை விசாரிக்க பெருங்குடி போலீசாருக்கு மதுரை எஸ்.பி. உத்தரவிட்டார். அதன் பேரில் பெருங்குடி போலீசார் மதுரை அவனியாபுரம் நகராட்சி தலைவர் போஸ் முத்தையா, அய்வன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். உடனடியாக அய்வன் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications