சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்குலி மே 19ல் பதவியேற்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏ.கே.கங்குலி வரும் 19ம் தேதி பதவியேற்க உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி ஏ.பி.ஷா டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஏ.கே.கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நேற்று பிறப்பித்தார். ஏ.கே.கங்குலி சென்னை உயர்நீதிமன்றத்தின் 23வது தலைமை நீதிபதி ஆவார். வரும் 19ம் தேதி அவர் பதவி ஏற்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1970ம் ஆண்டு கோல்கத்தா பல்கலையில் எல்எல்பி பட்டம் முடித்த கங்குலி, கோல்கத்தா உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர் 1994ல் கோல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியானார்.
இதையடுத்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு கோல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் ஒரிசா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications