பங்கு சந்தையில் லேடன்-தாவூத் பணம்-ஜெ.
இந்திய பங்கு சந்தையில் 'பார்ட்டிசிபேட்ரி நோட்கள்' மூலம் தீவிரவாதிகள் தங்களது விவரங்களை மறைத்துவிட்டு ஏராளமாக முதலீடு செய்து வருவதாகவும் இதனால் 'பொருளாதார தீவிரவாதம்' உருவாகி வருவதாகவும் ஜெயலலிதா கூறியிருந்தார்.
இதை மறுத்த மத்திய நிதியமைச்சகம் 'பார்ட்டிசிபேட்ரி நோட்கள்' குறித்து முழுமையாக புரிந்து கொள்ளமாலேயே ஜெயலலிதா குற்றம் சாட்டுவதாகவும், பங்குச் சந்தை முதலீடுகளை 'செபி' அமைப்பு கண்காணித்து வருவதாகவும் கூறியிருந்தது.
பங்குச் சந்தையில் (sensex) திடீரென ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுவது 'பார்ட்டிசிபேட்ரி நோட்கள்' (பங்கெடுக்கும் குறிப்புகள் என்னும் பத்திரங்கள்) மூலம் தான் என்று ஜெயலலிதா கூறும் குற்றச்சாட்டு, பங்கு சந்தையில் இந்தப் பத்திரங்கள் மற்றும் அவற்றின் பரிமாற்றங்கள் ஆகியவை பற்றி அவர் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது என்றும் கூறியிருந்தது.
இந் நிலையில் பதிலுக்கு ஜெயலலிதா மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் பற்றி நான் புகார் கூறியிருந்தேன். நான் கூறியவற்றுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கமாக பதில் அளிக்காமல் தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராக புகார்களை கூறியிருக்கிறது. நான் கூறிய புகார்கள் ஆதாரமற்றவை என்றும் எனக்கு உண்மை நிலவரம் தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறது.
மொரீஷியஸ் போய் வரும் 'பிளாக் மணி':
வெளிநாட்டவர்கள் யார் யார் என்ற முழு விவரம் இன்னும் தெரியாத நிலையிலேயே நமது நாடு உள்ளது. அவர்களது பெயர்கள் இன்னும் ரகசியமாகவே உள்ளன. கணக்கில் காட்டாத பணம் வெளிநாடு சென்று மீண்டும் மொரீஷியஸ் நாடு வழியாக இங்கே வருகிறது.
பி-நோட்' (participatory notes) முறைப்படி இந்தியாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெயர்களை மத்திய நிதி அமைச்சகம் வெளியிடத் தயாரா?. இந்த முதலீடுகள் ஒழுங்குபடுத்தும் செபி' அமைப்பின் இணையத் தளத்தில் வெளியிட தயாரா? இதை செய்யத் தயங்குவது ஏன்?
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தை வாங்க அனுமதிக்கப்படும்போது அதன் மூலம் பயன் அடைகிறவர், அதன் உரிமையாளர்கள் ஆகியோர் பற்றிய விவரங்களை நிதி இலாகா அறிந்து கொள்கிறதா?.
"பின் லேடன், தாவூத் இப்ராகிம்"...:
பின் லேடன், தாவூத் இப்ராகிம் போன்றவர்களி்ன் பணம் அந்த நிறுவனங்களுக்கு வரவில்லை என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அந்த நடவடிக்கைகள் என்ன?
இந்தியாவில் பங்கு வர்த்தகத்தில் தீவிரவாதிகள் ஈடுபடவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? பங்கு சந்தையில் தீவிரவாதிகள் பங்கு பற்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (எம்.கே.நாராயணன்) கூறிய கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது என்று நிதி இலாகா கூறுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 23ம் தேதியும், 24ம் தேதியும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.18,600 கோடிக்கு பங்குகளை விற்றார்கள். இது இந்திய பங்கு சந்தையில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.
'24 மணி நேரம் டைம்'!!!:
பங்குகளை விற்ற அந்த முதலீட்டாளர்கள் யார் என்பதை நிதி இலாகா வெளியிட வேண்டும். இந்திய பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவால் இந்திய முதலீட்டாளர்கள் பலர் பாதிக்கப்பட்டு தற்கொலை வரைக்கும் சென்றனர். ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று மறுப்பு தெரிவிக்கும் நிதி அமைச்சர் சிதம்பரம் எனது இந்த கேள்விகளுக்கு 24 மணி நேரத்தில் பதில் அளிக்கட்டும்.
இல்லாவிட்டால் ராஜினாமா செய்க!:
இல்லாவிட்டால் அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யட்டும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.