3 மாணவர்கள் - 2 ஆசிரியர்கள்: மெல்லச் சாகும் அரசுப் பள்ளி!
தூத்துக்குடி: தமிழகத்தில் பல அரசுப் பள்ளிகளில் ஏராளமான மாணவர்கள் இருந்தும் போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை. ஆனால் இதில் விதிவிலக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பள்ளி உள்ளது. இதில் மொத்தம் மூன்றே மாணவர்கள். அவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள்!
எட்டையபுரம் அருகே உள்ள கழுகாசலபுரத்தில் ஒரு ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. ஆண்டுதோறும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வந்ததால் இந்தப் பள்ளி, தொடக்கப் பள்ளியாக தரம் குறைக்கப்பட்டது.
தற்போது இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மொத்தம் 3 மாணவர்களே படித்து வருகின்றனர். 1,2,3 ஆகிய வகுப்புகளில் தலா ஒருவர் மட்டுமே உள்ளனர். 4 மற்றும் 5-ம் வகுப்புகளில் மாணவர்களே கிடையாது. 2 ஆசிரியைகள் பணியில் உள்ளனர். இவர்களில் ஒருவர் தலைமை ஆசிரியர்!
ஏன் இந்த நிலை?
கற்றுத் தருவதில் ஆசிரியர்கள் காட்டிய சுணக்கம், தரமற்ற வகுப்பறைகள் மற்றும் மாணவர்களின் படிபில் முன்னேற்றமில்லாமை போன்றவற்றால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள எட்டையாபுரம் தனியார் பள்ளிகளில் சேர்த்து விட்டார்களாம்.
இந்த ஊரில் மட்டும் மொத்தம் 300 குடும்பங்கள் உள்ளன. இவர்களின் குழந்தைகள் மொத்தமும் படிக்க அரசுப் பள்ளிக்கு வந்தால் இந்நேரம் இப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாகிவிட்டிருக்கும். ஆனால் இந்தப் பள்ளியில் படிக்க வைக்க எங்களுக்கும் பிடிக்கவில்லை, கற்றுத் தர அந்த ஆசிரியர்களுக்கும் பிடிக்க வில்லை என்கிறார் இந்த ஊரைச் சேர்ந்த ஒருவர்.
சூர்யா-ஜோதிகாவை வைத்து ஹீரோவா, ஜீரோவா என அரசு ஒருபக்கம் பிலிம் காட்டிக் கொண்டிருக்க, கழுகாசலபுரம் மாதிரி கிராமங்களில் நிதர்சனம் வேறு மாதிரியாக உள்ளது.
இம்மாதிரி படமெடுப்பதைவிட, இத்தகைய பள்ளிகளைத் தத்தெடுத்தெடுப்பதன் மூலம் ஒரு பள்ளிக்கூடம் சாகாமல் தடுக்கலாமே!












Click it and Unblock the Notifications