எனக்கே போக்கு காட்டிய ஜெ: தாக்கும் ஜோதி
மன்னார்குடி: மூன்றாவது அணி அமைக்க சமாஜ்வாடிக் கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங்கை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்த எனக்கே போக்கு காட்டி ஜெயலலிதா ஏமாற்றி விட்டார் என்று கூறியுள்ளார், சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, தற்போது திமுகவில் இணைந்துள்ள வழக்கறிஞர் ஜோதி.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நகர திமுக சார்பில் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வழக்கறிஞர் ஜோதி பேசுகையில், ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 20 பேருக்ககாக எனது சொந்த வழக்குகளை கூட விட்டு விட்டு, கடந்த திமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட 43 வழக்குகள் உள்பட 218 வழக்குகளை கடந்த 12 வருடங்களாக நடத்தி வந்தேன்.
பதவி கிடைக்கவில்லை என்பதற்காக திமுகவில் சேரவில்லை. புகுந்த வீட்டிற்குள் நுழைந்த மருமகள், பிறந்த வீட்டுடன் ஒப்பிட்டு பார்ப்பது போல சில சம்பவங்களை ஒப்பிட்டு பார்க்கிறேன்.
மூன்றாவது அணி அமைக்க அமர்சிங்குடன் பேசி ஏற்பாடு செய்து கொடுத்த எனக்கே போக்கு காட்டி ஜெயலலிதா ஏமாற்றி விட்டார்.
அதிமுக தனி நபர் கட்சியாக மாறிவிட்டது. அங்கு சுய மரியாதை என்பது சுத்தமாக கிடையாது. அதனால் தான் விலகினேன். உயிருக்கு மிரட்டல்கள் வரவே தான் திமுகவில் இணைந்தேன் என்றார் ஜோதி.












Click it and Unblock the Notifications