மத்திய அரசுக்கு எதிராக தமிழக கட்சிகள் திரள நெடுமாறன் அழைப்பு
சென்னை: இலங்கை அரசுக்கு ஆயுத உதவிகளை செய்து வரும் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று திரள வேண்டும் என தமிழீழ விடுலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ. நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன், பாதுகாப்புத்துறை செயலாளர் விஜய்சிங் ஆகியோர் திடீரென கொழும்பு சென்றுள்ளனர்.
என்ன நோக்கத்துடன் இவர்கள் சென்றிருக்கிறார்கள் என்பது வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் பாதுகாப்புத்துறை ஆலோசகர் மற்றும் செயலாளர் இக்குழுவில் சென்றிருப்பது ராணுவ உதவிகள் அளிப்பது தொடர்பாக பேசுவதற்காகவே என்பது வெளிப்படையாக தெரிகிறது.
ஏற்கனவே நார்வே சமரசத் தூதரை சிங்கள அரசு தன்னிச்சையாக திருப்பி அனுப்பியதை கண்டிக்கும் வகையில், ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி, ஆயுத உதவி ஆகியவற்றை நிறுத்தியுள்ளன. இலங்கையில் நடைபெறும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை உலக நாடுள் பலவும் வன்மையாக கண்டித்துள்ளன.
இந்த நிலையில், இந்திய அரசு இலங்கைக்கு அண்மையில் பெருமளவு நிதியுதவி அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து இப்போது ராணுவ ரீதியான உதவிகள் அளிப்பதற்கு முன்வந்துள்ளது என்பதைஇக்குழுவினரின் கொழும்பு பயணம் உறுதி செய்துள்ளது.
தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு செய்து வரும் உதவிகளை தடுத்திட தமிழக கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications