கல்வித்துறையில் என்ன தான் நடக்கிறது?-ராமதாஸ்
சென்னை: உயர் கல்வித்துறையில் என்ன தான் நடக்கிறது?. யாரை யார் ஆட்டி வைக்கிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிறுபான்மையினர் அல்லாத தனியார் பொறியியல் கல்லூரிகளில் 65 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்க வேண்டும் என்று தனியார் பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி வருகிறோம் என்றும், விரைவில் இது தொடர்பான உடன்பாடு ஏற்படும் என்றும் உயர்க்கல்வி துறைச் செயலாளர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளி வந்துள்ளது.
இந்த செய்தி வந்து இரண்டு நாட்கள் ஆகியும் மறுக்கப்படவில்லை. ஆகவே, உயர்க் கல்வித் துறைச் செயலாளர் தெரிவித்ததாக வெளிவந்துள்ள செய்தி உண்மை தான் என்றாகிறது.
சிறுபான்மையினர் அல்லாத தனியார் பொறியியல் கல்லூரிகள் 65 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்க வேண்டும் என்பது முடிந்துபோன விவகாரம். அந்த அடிப்படையில் தான் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுள்ளது. ஏறக்குறைய 1.25 லட்சம் மாணவ-மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அந்த உடன்பாட்டின் அடிப்படையில் தான் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான ஆண்டு கட்டணத்தை ரூ. 32,500ல் இருந்து ரூ. 62,500 ஆக உயர்த்தவும் நீதிபதி பாலசுப்பிரமணியன் குழு பரிந்துரை செய்துள்ளது.
குழுவின் பரிந்துரையை அரசும் ஏற்றுக் கொண்டு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. சுய நிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 65 சதவீதம் என்றும், அந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் முதல்வர் அறிவித்திருந்தார்.
ஆனால், இன்றைக்கு 65 சதவீதம் இடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்க சுயநிதிக் கல்லூரிகள் இன்னமும் முன்வரவில்லை என்பதும், அது தொடர்பாக அவர்களது கூட்டமைப்புடன் அரசு இனிமேல் தான் பேச்சு நடத்தப் போகிறது என்றும் உயர்க்கல்வி துறைச் செயலாளர் அறிவித்துள்ளார்.
இது என்ன புதுக் குழப்பம்?, உயர் கல்வித்துறையில் என்ன தான் நடக்கிறது?. யாரை யார் ஆட்டி வைக்கிறார்கள்?. ஏன் இந்த முரண்பாடு? என்று கேட்டுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications