Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எண்ணெய் விலை-ப.சிதம்பரத்தின் அட்டகாச யோசனை

Subscribe to Oneindia Tamil

P Chidambaram
ஜெட்டா: கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தடுக்க இந்தியா ஒரு நல்ல யோசனையைத் தெரிவித்துள்ளது. நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ள இந்த யோசனை ஏற்கப்பட்டால் சர்வதேச பங்குச் சந்தை புரோக்கர்களால் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டு வருவதைத் தடுக்க முடியும்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதையடுத்து அதைத் தடுக்க செளதி அரசின் சார்பில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், இறக்குமதி செய்யும் நாடுகளின் தலைவர்கள்-அமைச்சர்கள், முக்கிய எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் ஜெட்டாவில் நடந்தது.

அதில் ப.சிதம்பரத்தின் உரை மிக உணர்ச்சிப்பூர்வமாகவும் மிகச் சிறந்த யோசனைகள் அடங்கியதாகவும் அமைந்திருந்தது. அவர் பேசியதாவது:

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கட்டு்க்கடங்காமல் உயர்ந்து வரும் நிலையில் இந்தக் கூட்டத்தைக் கூட்டிய சவுதி அரேபிய அரசுக்கு முதலில் நன்றி.

இதில் நான் கனத்த இதயத்தோடு கலந்து கொண்டிருக்கிறேன். 110 கோடி மக்கள் தொகை கொண்ட எங்கள் நாடு சமீபத்தில் தான் வறுமையிலிருந்து மீண்டு பொருளாதார வளர்ச்சியில் அடி எடுத்து வைத்துள்ளது. எங்களது இந்த வளர்ச்சிப் பயணம் எளிதானதாக இருக்கவில்லை. பல போராட்டங்களுக்குப் பின் வளர்ச்சிப் பாதையை எட்டிப் பிடித்திருக்கிறாம்.

இப்போது எங்கள் வளர்ச்சி இலக்குகள் எல்லாம் எட்டாக்கனியாகிவிடுமோ என்ற அச்சத்துடன் பேசுகிறேன். வளர்ந்து வரும் நாடுகள் சமீப காலத்தில் அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை, பொருளாதார வளர்ச்சியை பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு ஒழித்துக் கட்டிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

3 வாரங்களுக்கு முன் பெட்ரோலிய பொருட்களின் சர்வதேச விலை உயர்வில் வெறும் 9 சதவீதத்தை நுகர்வோர் மீது திணித்தது இந்தியா. அதன் பலன், எங்கள் பணவீக்கம் 11 சதவீதமாகிவிட்டது.

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான இந்தோஷேனியா, ரஷ்யா, செளதி அரேபியா, வெனிசுவேலாவிலும் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளதை கவலையுடன் சுட்டிக் காட்டுகிறேன்.

இந்த நிலைமை எப்படி வந்தது?. முதலில், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் இந்த விலை உயர்வை அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, விலையை அவர்களே நிர்ணயிக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

சர்வதேச பங்குச் சந்தைகளில் நடக்கும் யூக வர்த்தகம் (speculative trading) காரணமாக விலைகள் தாறுமாறாக உயர்வதை தடுத்து நிறுத்தும் பலம் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கே உண்டு. அந்த பலத்தை நீங்கள் காட்ட வேண்டும்.

கச்சா விலை மேலும் உயர்வதைத் தடு்க்க இந்த நாடுகள் உடனடியாக உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். உலக அளவில் பெட்ரோலியத்தின் தேவை 1.1 சதவீதம் அதிகரித்து வரும் நிலையில் உற்பத்தி அதை ஈடு செய்யவில்லை. மாறாக உற்பத்தி குறைந்துவிட்டது.

2030ம் ஆண்டுக்குள் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க 10 டிரில்லியன் டாலர்கள் அளவுக்கு முதலீடுகள் தேவைப்படும் என சர்வதேச எரிசக்திக் கழகம் (International Energy Agency) கணக்கிட்டுள்ளது. இந்தப் பணத்தை நம்மால் திரட்ட முடியும் தான். ஆனால், உலக அளவில் கச்சா எண்ணெயின் தேவை குறையும் என்ற தவறான கண்ணோட்டம் காரணமாக முதலீடுகளைச் செய்ய முன் வர மறுக்கிறார்கள். முதலில் இந்த தவறான கண்ணோட்டத்தை விட்டொழிக்க வேண்டும்.

அதே நேரத்தில் உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு தேவை மிகவும் அதிகரித்துவிட்டதால் தான் விலை உயர்ந்துவிட்டது என்ற கருத்தை நான் திடமாக மறுக்கிறேன். கடந்த 12 மாதங்களில் அப்படி என்ன தேவை அதிகரித்துவிட்டது?. இதற்கான விளக்கம் யாரிடமும் இல்லை. கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்டில் பீப்பாய் 70 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இன்று இரு மடங்காகிவிட்டது. இதற்கான காரணம் 'டிமாண்ட்' அதிகரித்தது அல்ல.

காரணம் வேறிடத்தில் இருக்கிறது. சர்வதேச பங்குச் சந்தையில் நடக்கும் (குறிப்பாக அமெரிக்கா-இங்கிலாந்து) யூக வியாபாரம் தான் இதற்குக் காரணமே தவிர வேறில்லை.

மிகப் பெரிய நிதி நிறுவனங்கள் பில்லியன் கணக்கிலான டாலர்களை எண்ணெய் வர்த்தகத்தில் திருப்பி விட்டுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன.

(கோல்ட்மேன் சேக்ஸ், சிட்டி குரூப், ஜே.பி. மோர்கன் சேஸ், மோர்கன் அண்ட் ஸ்டான்லி ஆகிய நான்கு நிறுவனங்கள் தான் கச்சா எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளில் மிக அதிகமாக முதலீடுகளை தள்ளிவிட்டவர்கள் என்பதை நாம் நேற்று சிறப்புக் கட்டுரையில் சுட்டிக் காட்டியிருந்தோம்.

படிக்க: பெட்ரோல் விலை..அமெரிக்காவின் இன்னொரு ஆயுதம்!)

இந்த முதலீடுகளால் உருவாக்கப்பட்ட டிமாண்ட் செயற்கையானது. இந்த பங்கு வியாபாரிகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வர்த்தகத்தை மீட்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அதை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உடனடியாக செய்ய வேண்டும்.

இந்த சி்க்கலுக்கு எங்களிடம் ஒரு தீர்வு (Price Band Mechanism) உள்ளது. அதாவது கச்சா எண்ணெய் விலை தொடர்பாக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளும் இறக்குமதி செய்யும் நாடுகளும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அதன்படி, உற்பத்தி செய்யும் நாடுகள் விலை இந்த அளவுக்கு மேல் போகாது என்று ஒரு விலையை (Price Band) நிர்ணயிக்க வேண்டும். அதற்கு உத்தரவாதமும் தர வேண்டும்.

அதே போல இறக்குமதி செய்யும் நாடுகளும், விலை இதற்கு மேல் குறையாது என்ற உத்தரவாதம் தர வேண்டும். இந்த நிர்ணயிக்கப்பட்ட Price Bandக்குள் தான் பங்குச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீதான யூக வியாபாரத்துக்கு இடம் தரப்பட வேண்டும்.

இந்த Price Band Mechanism அமலுக்கு வந்தால் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் இருவருக்கும் நஷ்டம் ஏற்படாது. பங்கு வர்த்தக நிறுவனங்களாலும் விலையை ஒரு அளவுக்கு மேல் குறைக்கவோ அல்லது உயர்த்தவோ முடியாது என்றார் சிதம்பரம்.

(நாம் நேற்று காலையில் வெளியிட்ட கட்டுரையின் சில முக்கிய கருத்துக்களும் மாலை ஜெட்டாவில் நடந்த 'oil summit' கூட்டத்தில் அமைச்சர் ப.சிதம்பரத்தின் பேச்சிலும் எதிரொலித்துள்ளன. எனது கட்டுரையின் கருத்துக்கள் தவறானவை என்று சில நண்பர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் எழுதியிருந்தனர். அந்த நண்பர்களுக்கு ப.சிதம்பரத்தின் பேச்சையே பதிலாக தர நினைக்கிறேன்- அன்புடன் ஏ.கே.கான், ஆசிரியர், தட்ஸ்தமிழ்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+