தமிழக நதிகள் இணைப்பு: கருணாநிதி இன்று தொடங்கி வைக்கிறார்
தமிழக நதிகளை இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது. முதல் கட்டமாக மாயனூரில் கதவணை கட்டம் பணிகள், காவிரி, கொள்ளிடக் கரைகளை பலப்படுத்தும் பணிகள், திருச்சி மாநகராட்சி நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் இன்று மாலை நடைபெறுகிறது.
திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி பணிகளைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேருரையாற்றுகிறார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். போக்குவரத்து துறை அமைச்சர் கே.என். நேரு, வனத்துறை அமைச்சர் செல்வராஜ், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராசா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
விழாவில் கலந்து கொள்வதற்காக மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நேற்று இரவு முதல்வர் கருணாநிதி தஞ்சை சென்றார். இன்று காலை 9.30 மணிக்கு தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தின் 200வது ஆண்டு விழாவில் முதல்வர் பங்கேற்கிறார்.