வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம்-மழை ஆரம்பம்
சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு ஒரிசாவுக்கும், வடக்கு ஆந்திர கடலுக்கும் இடையே இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளிலும் புதுச்சேரியிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவிலும், தமிழகத்திலும் தென் மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்திருப்பதால் இதே காலட்டத்தில் கணிசமான அளவுக்கு நல்ல மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்றும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. இதனால் தொடர்ந்து நான்காவது நாளாக வெப்பத்தின் கடுமை குறைந்துள்ளது.
இதற்கிடையே கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
கன மழை காரணமாக கடலில் கொந்தளிப்பும் நிலவியதால் குமரி மாவட்டத்தின் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்த மாவட்டத்தில் பெய்யும் மழையால் பாபநாசம் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது. அதே போல திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
மின் தடை விலகும்?:
இதற்கிடையே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர் மின் நிலையங்களில் உற்பத்தி அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் மின் வெட்டு குறையும் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பொதுவாக ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய தென் மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியதால்1,000 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதே நிலைமை தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழக மின்வாரியம் தனது பயனீட்டாளர்களுக்கு மின் விநியோகம் செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டது.
தென்மேற்கு பருவமழை சற்று தீவிரம் அடைந்துள்ளதாலும் தமிழகத்தின் மின் தேவை குறைந்ததாலும் தமிழ்நாடு மின்சார வாரியம் நகர்ப்புற பகுதியில் மின் தடையை தளர்த்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதன் காரணமாக மின் நிலைமை சீரடைய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் தொழிற்சாலைகளுக்கான வாராந்திர விடுமுறை மின் நிலையில் கணிசமான முன்னேற்றம் வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications