'அமைச்சரை காப்பாற்றும் கருணாநிதி மீது வழக்கு'!
நாகர்கோவில்: அதிகாரியை தாக்கிய அமைச்சர் சுரேஷ் ராஜனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடரப்படும் என வழக்கறிஞர் கீரினி பிரசாத் என்பவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ஏப்ரல் 18ம் தேதி அரசு சார்பில் கலர் டிவி வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது துணைக் கலெக்டர் ஜனார்த்தனன் தாக்கப்பட்ட வழக்கில் 4 மாதத்திற்கு பின்பு கொலை முயற்சி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒரு வழக்கு புலன் விசாரனையில் இருக்கும்போது நீதிமன்றம் கூட தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் முதல்வர் கருணாநிதியே தலையிடுவது, மேல் விசாரணையை தடுத்து நிறுத்துவது போல் அமைந்துள்ளது.
அமைச்சர் சுரேஷ்ராஜனை காப்பாற்ற தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சி செய்கிறார். அதனால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டி வழக்கு தொடரப்போகிறோம்.
மேலும் தமிழக முதல்வர் கருணாநிதி மீதும் வரும் 12ம் தேதி அன்று மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப் போகிறோம் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications