திருப்பதியில் விபத்து-உயிர் தப்பினார் சந்திரபாபு நாயுடு
திருப்பதி: ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு.
சந்திரபாபு நாயுடு, முன்னாள் அமைச்சர் கோபால கிருஷ்ண ரெட்டி, அமர்நாத் ரெட்டி உள்பட நான்கு பேர் குண்டு துளைக்காத காரில் திருப்பதிக்கு சென்றனர். அங்கு வெங்கடாஜலபதியை தரிசனம் செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
மலைப் பாதையில் வந்து கொண்டிருந்தபோது அவர்கள் வந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. கூர்மையான மலைப் பாதையில் பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடியது. இதனால் சந்திரபாபு உள்பட அனைவரும் கதிகலங்கி போயினர்.
பின்னர் ஒரு வழியாக காரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் டிரைவர். விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதையடுத்து போலீஸ் வாகனத்தில் பத்திரமாக சந்திரபாபு உள்பட 4 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.