காங் கூட்டணியில் தேமுதிகவும் சேரலாம்-தங்கபாலு

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வ.உ.சிதம்பரனார் வாரிசுகள் 4 பேர் வாழ வழியில்லாமல் இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. அவர்களுக்கு நிரந்தரமாக தங்கியிருக்க வீடும் மாதந்தோறும் தேவையான அனைத்து உதவிகளும் காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்படும்.
அவர்களை இங்கு அழைத்து வந்திருக்கிறோம். இது காங்கிரஸ் கட்சி அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமை.
இது போல நாட்டின் சுதந்திரத்துக்கு பாடுபட்ட யாராவது வாழ வழி இல்லாமல் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் வாழ் நாள் முழுவதும் உதவி வழங்கப்படும்.
கடந்த சில நாட்களாக கம்யூனிஸ்ட் கட்சியினர் காங்கிரஸ் மூழ்கும் கப்பல் என கூறி வருகிறார்கள். காங்கிரஸ் ஒரு பிரமாண்டமான கப்பல். அது மூழ்கும் கப்பல் அல்ல. மூழ்குபவர்களை காப்பாற்றும் கப்பல்.
இந்த பாதுகாப்பான கப்பலில் பயணம் செய்த கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென கடலில் குதித்து விட்டனர். இப்போது அவர்கள் தான் மூழ்கி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பார்வையில் காங்கிரஸ் மூழ்குவது போல அவர்களுக்கு தோன்றுகிறது. அது அவர்களின் பார்வை கோளாறு.
காங்கிரஸ் கூட்டணியில் மதசார்பற்ற கட்சிகள் கைகோர்த்து நிற்கின்றன. காங்கிரஸ் கூட்டணியில் பாமகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் இருக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார். பாமக இந்த கூட்டணியில் இருந்தால் பலம் அதிகரிக்கும் என்று அவரே கருத்து தெரிவித்திருக்கிறார்.
எனவே தமிழ்நாட்டிலும் மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அதற்காக நாங்களும் முயற்சிக்கிறோம். காலப்போக்கில் அது நடக்கும்.
தேமுதிக உள்பட எந்த கட்சியானாலும் காங்கிரஸ் தலைமையை ஏற்றால் அவர்களையும் சேர்த்து கொள்வோம்.
கம்யூனிஸ்டுகள் மேற்கு வங்காளம், கேரளா தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு எங்களை எதிர்ப்பது போல பாவனை செய்கிறார்கள். தேர்தல் முடிந்ததும் மனம் மாறி விடுவார்கள்.
3வது அணி என்பது ஒரு கற்பனை. அது ஓவியம் ஆகாது. இடதுசாரிகளுக்கும் இது தெரியும். 3வது அணியும் வராது, அது ஆட்சியையும் பிடிக்காது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.
தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரசார் விருப்பம் தெரிவிப்பது பற்றி சோனியாவிடம் கூறியிருக்கிறோம். எந்த கொள்கை முடிவு என்றாலும் அவர்தான் எடுப்பார்.
தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக ஆட்சி காங்கிரஸ் தலைவர்களையும், காங்கிரஸ் கொள்கையையும் மதிக்கிறது. காமராஜர் திட்டங்களை நிறைவேற்றுகிறது என்றார் தங்கபாலு.












Click it and Unblock the Notifications