கோயில் திருவிழாவில் மோதல் - 6 பேர் காயம்
தென்காசி: தென்காசி அருகே கோவில் திருவிழாவில் முதல் மரியாதை பெறுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசியை அடுத்த இலஞ்சி மிஷன் தெருவில் உள்ள வடகுத்தி அம்மன் கோவில் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் முதல் மரியாதை பெற்றுக் கொள்வது தொடர்பாக இரண்டு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
திருவிழா முடிந்த பிறகு ஒரு கோஷ்டியை சேர்ந்தவர்கள் கையில் அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்களுடன் மற்றோரு கோஷ்டியை சேர்ந்தவர்களை தாக்கியதில் செல்வகுமார், சுகுமார், இசக்கி, செல்வம், மற்றொரு இசக்கி, ராமசாமி ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.
பலத்தக் காயமடைந்த செல்வகுமார் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக சுகுமார் கொடுத்த புகாரின் பேரில் குற்றாலம் போலீஸார் வழக்குபதிவு செய்து கீழ இலஞ்சியை சேர்ந்த ரஞ்சித்குமார், இ.குமார், காந்தி என்ற முத்துகுமார், பாண்டி, ரவி, செல்லதுரை, சொர்ணம், கோபால் உள்பட 15 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் இலஞ்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.