இலங்கை குண்டுவெடிப்பு: முன்னாள் தளபதி உள்பட 27 பேர் பலி
இலங்கை படைகள், கிளிநொச்சியைக் குறி வைத்து தீவிர தாக்குதலில் இறங்கியுள்ள சூழ்நிலையில் இன்றுகாலை அனுராதபுரத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்துள்ளது.
காலை 8.30 மணிக்கு நடந்த அனுராதபுராவில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலகத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தது. இந்த பயங்கர சம்பவத்தில் முன்னாள் ராணுவ தளபதியான ஜனக பெரேரா, அவரது மனைவி வாஜிரா உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா உறுதிப்படுத்தியுள்ளார்.
பெரேரா - முக்கிய தளபதி
எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் வட மத்திய மாகாண தலைவராக செயல்பட்டவர் பெரேரா. அம்மாகாணத்தின் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருந்தார்.
ஜே.வி.பி.யை ஒடுக்கியவர்:
சிங்கள இனவாத யக்கமான ஜனதா விமுக்தி பெரமுனாவை இரும்புக் கரம் கொண்டு ஒதுக்கியவர் ஜனக பெரேரா. 1987-89ம் ஆண்டுகளில் ஜேவிபிக்கு எதிராக ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் பெரேராவின் பங்கு முக்கியமானது. வட மேற்கு மாகாண ராணுவ கமாண்டராக அவர் இருந்தபோதுதான் ஜேவிபியின் தலைவர் ரோஹன விஜய வீராவை பிடித்தார்.
அதன் பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அவர் தீவிரமாக பங்கேற்றார். யாழ்ப்பாணம், வெளி ஓயா ஆகிய பகுதிகளில் புலிகளுக்கு எதிராக ராணுவத்திற்குக் கிடைத்த வெற்றிக்கு பெரேராதான் முக்கியப் பங்கு வகித்தார். இவரது தலைமையின் கீழ் தான் யாழ்ப்பாணம் ராணுவம் வசம் வந்தது.
3ம் ஈழப் போரின்போது யாழ்ப்பாணம், மணலாறு ஆகிய பகுதிகளில் ராணுவத் தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர். யானை இறவு பகுதி விடுதலைப் புலிகளிடமிருந்து விடுபட்டவுடன், ராணுவத்தின் ஒட்டுமொத்த கமாண்டராக நியமிக்கப்பட்டார். அப்போது யாழ்ப்பாணத்தில் தளபதியாக இருந்தவர்தான் தற்போதைய தலைமைத் தளபதி சரத் பொன்சேகா.
ராணுவத் தளபதியாக இருந்து வந்த பெரேராவை, பொன்சேகாவை வைத்து ஓரம் கட்டியது ராஜபக்சே அரசு. பின்னர் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பெரேரா, ஆஸ்திரேலியாவுக்கான இலங்கை தூதராக நியமிக்கப்பட்டார். பின்னர் இந்தோனேசியாவில் தூதராக பணியாற்றினார்.
1984ம் ஆண்டு, மணலாறு பிராந்தியத்தில் உள்ள மங்கிண்டிமலை பகுதியை ராணுவம் கைப்பற்றிய பின்னர் அக்கிராமத்தில் வசித்து வந்த தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அந்த கிராமத்திற்கு, ஜனக பெரேராவின் நினைவாக ஜனகபுரா என பெயரிடப்பட்டது. அங்கிருந்த தமிழர்கள் அனைவரும் துரத்தப்பட்டு சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனகபுரா பிராந்திய ராணுவ சிறப்புப் படையின் கமாண்டராகவும் பெரேரா செயல்பட்டு வந்தார்.
இலங்கை ராணுவத்தின் மிகப் பிரபலமான தளபதிகளில் பெரேராவும் ஒருவர். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு ராணுவ முகாம்களுக்கு செல்ல ராஜபக்சே அரசு தடை விதித்தது. ராஜபக்சே அரசையும், ராணுவ தளபதி பொன்சேகாவையும் பெரேரா கடுமையாக விமர்சித்ததால் இந்த அதிரடி தடையை ராஜபக்சே அரசு விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை ராணுவத்தின் மிக முக்கிய தளபதிகளில் ஒருவரான பெரேரா கொல்லப்பட்டுள்ளது ராஜபக்சே அரசுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.