திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா 29ல் தொடக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வரும் 29ம் தேதி தொடங்குகிறது.
அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா வரும் 29ம் தேதி துவங்குகிறது.
அன்று அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 2.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. யாகசாலையில் வள்ளி, தெய்வானை சமேத சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருள்கிறார். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
அதை தொடர்ந்து பகல் 10 மணிக்கு உச்சிகால பூஜையும், மூலவருக்கு மகாதீபாராதனை நடக்கிறது. பின்னர் யாகசாலையில் மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு சாயரட்ச்சை தீபாராதனை மற்றும் காலபூஜைகள் நடக்கின்றன.
அதைத் தொடர்ந்து 4ம் தேதி சுப்பிரமணியசுவாமி தேவசேனா திருக்கல்யாணம் நடக்கிறது.
மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சஷ்டி விழாவின்போது கோவிலுக்கு வருவார்கள். விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.