வீடுகளின் மீது செல்போன் டவர்கள்-எதிர்த்து வழக்கு
சென்னை: குடியிருப்புகளின் மேல் மாடிகளில் செல்போன் கோபுரங்கள் அமைப்பதை தடை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து சென்னையைச் ேசர்ந்த மக்கள் சேவகர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், செல்போன் டவர்கள் அமைப்பதற்கு உரிய விதிமுறைகள், நெறிமுறைகள் இல்லாததால் குடியிருப்புகளின் மேல் மாடிகளில் சரமாரியாக செல்போன் கோபுரங்கள் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகின்றன.
இவற்றை முறைப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ, கண்காணிக்கவோ எந்தவித வசதியும் தற்போது இல்லை.
இப்படி அதிக அளவில் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் கட்டடங்களின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் மக்கள் நெருக்கம் மிக்க பகுதிகளிலும் இதுபோல செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் பல விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்களால் மக்களுக்கு சுகாதார பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே செல்போன் கோபுரங்களை நிர்மானிப்பதற்கு உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும். காலியிடங்களில் மட்டுமே இதுபோன்ற செல்போன் கோபுரங்களை அமைக்க உத்தரவிட வேண்டும். குடியிருப்புகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரங்களை நீக்க உத்தரவிட வேண்டும்.
உலக சுகாதார அமைப்பு விதித்துள்ள கட்டுப்பாடுகளின் படியே செல்போன் கோபுரங்களை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், 3 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.