சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 60 சிறப்பு பஸ்கள்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்திறங்கும் பயணிகள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல வசதியாக தினமும் காலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழகத்தின் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் சென்னை மாநகருக்கு ரயில்கள் மூலம் வருகை புரியும் பொதுமக்கள் அதிகாலை நேரங்களில் போதிய பேருந்து வசதியின்மையால் மற்ற வாகனங்களில் அதிகமான கட்டணம் செலுத்தி பயணம் செய்கிறார்கள்.
இதைத் தவிர்ப்பதற்காக, போக்குவரத்துத்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில், மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விடியற்காலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நகரின் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு 60 சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, சென்ட்ரல் ரயில் நிலைத்தில் இருந்து கே.கே.நகர், சாலி கிராமம், நந்தம்பாக்கம், மாங்காடு, தரமணி, கீழ்க்கட்டளை, கோவளம், மடிப்பாக்கம், மேற்கு முகப்பேர், கிழக்கு தாம்பரம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர், ஐயப்பன்தாங்கல், வடபழனி, கிண்டி, தாம்பரம், ஈஞ்சம்பாக்கம், திருவான்மியூர், கேளம்பாக்கம், கூடுவாஞ்சேரி, ஆவடி, பூந்தமல்லி, மந்தைவெளி, பெரியார் நகர், கொரட்டூர், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், எம்.எம்.டி.ஏ. காலனி, அண்ணா நகர் மேற்கு, வில்லிவாக்கம், செங்குன்றம், மணலி, அம்பத்தூர் ஆகிய 33 இடங்களுக்கு 60 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காலை 6.30 மணிக்கு மேல் வரும் பயணிகள் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications