விலைவாசி, மின்வெட்டு: 16-ம் தேதி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்!

இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
உயிர் வாழ்வதற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி, கீரை போன்றவற்றின் விலைகள் கட்டுக்கடங்காமல் நாள்தோறும் ஏறி வருகின்றன.
ஓட்டல்களில் ரூ.20-க்கு மலிவு விலை சாப்பாடு திட்டம் பிரபலமாக விளம்பரப்படுத்தப்பட்டது. அந்த திட்டம் இப்பொழுது என்ன ஆனது என்பதே தெரியவில்லை. ரேஷன் கடைகளில் ரூ.50க்கு தரும் மளிகைப் பொருட்களால் எவ்வித பயனும் இல்லை. சரியாக கிடைப்பதுமில்லை. மத்திய அரசோ விலைவாசியை குறைப்பதற்கு பதிலாக விலைவாசியை உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அண்மையில் சுமார் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு பணப் புழக்கத்தை அதிகரிக்க மத்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. கேட்டால் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கை என்கின்றனர். ஆனால், இதனால் விலைவாசி உயரும் என்றும் அதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினரே அச்சப்படுகிறார்.
உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால் மத்தளத்திற்கு இரு பக்கமும் இடி என்பதைப்போல, மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
விண்ணை முட்டும் குடும்பச்செலவை சரிக்கட்ட வருமானத்தை பெருக்க வழியும் இல்லை. வரலாறு காணாத மின்சார நெருக்கடியினால் புதிய வேலைகள் கிடைக்காதது மட்டும் அல்ல, ஏற்கனவே உள்ள வேலைகளும் பறிபோகின்றன. தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன.
திக்கித் திணறி திண்டாடும் இந்த நிலைமையை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்தும் வகையில் தே.மு.தி.க. மகளிர் அணியினர் தமிழ்நாடு முழுவதும் வரும் நவம்பர் 16-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டங்களின் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அல்லது கோட்டாட்சி தலைவர் அலுவலகம் முன்பு விலைவாசி உயர்வு, மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications