கஸாப் தொடர்புகளை செய்தியாக்குவதை தடுக்கும் பாக்
இஸ்லாமாபாத்: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் சிக்கி கைதாகியுள்ள தீவிரவாதி முகம்மது அஜ்மல் கஸாப்பின் தொடர்புகளை செய்தியாக்கவோ அல்லது படம் பிடிக்கவோ கூடாது என போலீஸார் தடுத்து வருகின்றனர். கஸாப் குறித்து யாரும் விசாரிக்க கிராமத்திற்கு வந்தால் அவர்களையும் தடுத்து மிரட்டி அனுப்ப ஆரம்பித்துள்ளனர்.
தீவிரவாதி கஸாப், பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணம், ஓகாரா மாவட்டம் பரீத்கோட் கிராமத்தைச் சேர்ந்தவன். அது குறித்த அத்தனை ஆதாரங்களையும் பாகிஸ்தான் மீடியாக்கள் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன.
சில நாட்களுக்கு முன்பு கஸாப் எனது மகன்தான் என்று அவனது தந்தை அமீர் கஸாப் பகிரங்கமாக அறிவித்தார். கஸாப் அந்த கிராமத்தைச் சேர்ந்தவன்தான் என்று கிராமத்தினரும் தெரிவித்தனர். இதனால் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகரித்தது.
இதையடுத்து தற்போது கஸாப் குறித்த செய்திகள் வெளியாவதை தடுக்கும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு இறங்கியுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மற்றும் ஐ.எஸ்.ஐ. உளவுப் பிரிவினர் நூற்றுக்கணக்கில் பரீத்கோட் கிராமத்தில் சாதாரண உடைகளில் குவிக்கப்பட்டுள்ளனர். கிராமத்தினரைப் போல அந்த கிராமத்தில் முகாமிட்டுள்ளனர்.
கிராமத்திற்கு பத்திரிக்கையாளர்கள் யாராவது வந்தால் இவர்கள் கிராமத்தினரைப் போல ஒன்று கூடி அவர்களை மிரட்டி எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.
பாதுகாப்புப் படையினரும், ஐ.எஸ்.ஐ. அமைப்பினரும் பரீத்கோட் கிராமத்தில் குவிந்திருப்பதை ஜியோ நியூஸ் டிவி சானல் ஒளிபரப்பியுள்ளது.
அங்கு சென்ற பத்திரிக்கையாளர்கள் சிலரை 100க்கும் மேற்பட்டோர் கூடி நிறுத்தியுள்ளனர். இனிமேல் இந்தப் பக்கமே வரக் கூடாது என்று மிரட்டி அனுப்பி விட்டனர். அவர்களில் சிலரது கையில் போலீஸ் லத்தி இருந்ததாக பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கஸாப் குடும்பத்தினரையோ அல்லது அவர்களது உறவினர்களையோ பத்திரிக்கையாளர்கள் யாரும் சந்திக்க முடியாதபடி தடுக்கும் முயற்சியில், லோக்கல் பஞ்சாயத்து தலைவரான குலாம் முஸ்தபா வாட்டூ முன்னணியில் உள்ளார்.
கிராமத்திற்கு வரும் பத்திரிக்கையாளர்களிடம், எங்களது விருப்பத்தை மீறி யாரேனும் செய்தி சேகரிக்க முயன்றால் அதனால் கடும் விளைவுகள் ஏற்படும். அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என்று எச்சரிக்கிறாராம்.
நிருபர்களுக்கு அடி - கேமரா உடைப்பு
ஒரு டிவி சானலைச் சேர்ந்த வீடியோகிராபர், இந்தக் கும்பலைப் படம் பிடிக்க முயன்றபோது கேமராவை ஒருவர் பறித்துள்ளார். அதேபோல ஒரு வெளிநாட்டு நிருபரின் கேமராவையும் அந்தக் கும்பல் பறித்து சேதப்படுத்தியுள்ளது. சிலருக்கு அடியும் விழுந்தது.
மேலும் பத்திரிக்கையாளர்களின் செல்போன்கள், டிஜிட்டல் வீடியோ டேப்புகளையும் அந்தக் கும்பல் பறித்து சேதப்படுத்த முயன்றது. கேமராவிலிருந்து டிஜிட்டல் டேப்பையும் அக்கும்பலில் இருந்த சிலர் சாமர்த்தியமாக எடுத்துள்ளனர்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர் குழுவில் இடம் பெற்றிருந்த ஆசிம் ரானா கூறுகையில், டிஜிட்டல் வீடியோ டேப்பை, படிப்பறிவில்லாத கிராமத்தினரால் நிச்சயமாக எடுக்க முடியாது. ஆனால் அக்கும்பலில் இருந்த சிலர் எடுத்த விதத்தைப் பார்க்கும்போது அது நிச்சயம் ஐ.எஸ்.ஐ. குழுவினராகத்தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.
கஸாப் குறித்து இனியும் எந்தத் தகவலும் பரீத்கோட்டிலிருந்து பரவக் கூடாது என்பதற்காக அங்கு ஐஎஸ்ஐ கும்பலை பாகிஸ்தான் நிர்வாகம் உட்கார வைத்துள்ளதையே இது காட்டுவதாக பாகிஸ்தான் மீடியாக்கள் கூறுகின்றன.