ரியல் எஸ்டேட் முதலீடு: முதலீட்டாளர்கள் எச்சரிக்கை-பணிந்தது சத்யம்!!
மேடாஸ் பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் பங்குகளை 1.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும், அதன் துணை நிறுவனமான மேடாஸ் இன்ப்ரா நிறுவனத்தின் பங்குகளை 300 மில்லியன் டாலருக்கும் கையகப்படுத்தப் போவதாக சத்யம் நிறுவனம் நேற்று மாலை அறிவித்தது.
மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் நிறைவு பெற்றபோது இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் இதற்கு சத்யம் முதலீட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏற்கெனவே பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள கட்டுமானத் துறை நிறுவனத்தின் பங்குகளை இந்தியாவின் பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான சத்யம் ஏன் வாங்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த அறிவிப்பு வெளியானவுடன் நியூயார்க் பங்குச் சந்தையில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் விலை கடுமையாக சரிந்தது. கிட்டத்தட்ட 55 சதவிகித சரிவைச் சந்தித்தன சத்யம் பங்குகள்.
அதே போல இன்று காலை மும்பை பங்குச் சந்தை துவங்கியதுமே 30 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்தன சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ள சத்யம் பங்குகள்.
முதலீட்டாளர்களின் இந்த எதிர்ப்பு காரணமாக வேறுவழியின்றி மேடாஸ் நிறுவனத்தின் பங்குகளை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாக சத்யம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதை சத்யம் தலைவர் ராமலிங்க ராஜூவே அறிவித்தார். இதையடுத்து சத்யம் நிறுவன பங்குகளின் விலை வீழ்ச்சி இன்று சற்று மட்டுப்படத் தொடங்கியுள்ளது.
மேடாஸ் இன்ப்ரா நிறுவனத்தில் 36 சதவீத பங்குகளையும், மேடாஸ் பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் 35 சதவீகித பங்குகளையும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜூ மற்றும் சில இயக்குனர்கள் தனிப்பட்ட முறையில் வைத்துள்ளனர்.
மேலும் மேடாஸ் இன்ப்ரா, மேடாஸ் பிராபர்ட்டீஸ் ஆகிய நிறுவனங்களை ராஜுவின் மகன்கள் தான் நடத்தி வருகின்றனர்.
சத்யம் நிறுவனத்தில் ராஜு குடும்பத்துக்கு 8.5 சதவீத பங்குகள் உள்ளன. மீதம் அனைத்தும் முதலீட்டாளர்களின் பணமே. அந்தப் பணத்தில் 1.6 பில்லியன் டாலரை எடுத்து தனது மகன்களின் இரு நிறுவனங்களில் முதலீடு செய்ய முயன்றார் ராஜூ.
இதன்மூலம் பொது மக்களின் பணத்தில் தனது குடும்பத்தின் நிறுவனங்களைக் காக்க சத்யம் நிறுவனர் முயன்றது அந்த நிறுவனத்துக்கு பெரும் அவப் பெயரைத் தேடித் தந்துவிட்டது.
இந்த விவகாரம் குறித்து மத்திய அரசும் விசாரிக்கவுள்ளது.