For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக்-பிரச்சினையை தீர்க்க கூலிக்கு தற்கொலை படை!

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தனிப்பட்ட விரோதங்களுக்காக யாரையாவது தீர்த்துக் கட்ட வேண்டுமானால் தற்கொலைப் படையை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளும் புதிய கலாச்சாரம் பரவியுள்ளது. சமீபத்தில் கொல்லப்பட்ட ஒரு எம்.பி. வழக்கில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி நவாஸ் ஷெரீப் கட்சியின் எம்.பியான ரஷீத் அக்பர் நிவானி என்பவர் தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் ரஷீத் மட்டுமல்லாமல் 26 பேரும் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை லாகூர் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கூலிக்கு அமர்த்தப்பட்ட தற்கொலைப் படையினர்தான் இந்தத் தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வக்காஸ் ஹூசேன், நஸர் ஹுசேன், ஆரிப் கான், முகம்மது அம்ஜத், சயீத் அம்ஜத் அப்பாஸ் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இஜாஸ் ஹூசேன் என்பவருக்கும், வக்காஸ் ஹூசேனுக்கும் இடையே பணப் பிரச்சினை இருந்தது.

வக்காஸ் பழைய கார் விற்பனையில் இறங்கினார். இதற்காக இஜாஸிடமிருந்து ரூ. 21 லட்சம் பணத்தை கடனாக வாங்கினார். ஆனால் பணத்தைத் திருப்பித் தருவதில் பிரச்சினை ஏற்பட்டது.

தொழில் நஷ்டம் காரணமாக, பணத்தைத் திருப்பித் தர முடியாததால், அதற்குப் பதிலாக 7 கார்களை இஜாஸிடம் கொடுத்துள்ளார். ஆனால் கூடுதலாக ரூ. 54 லட்சம் பணம் தர வேண்டும் என நெருக்கியுள்ளார் இஜாஸ்.

இதனால் கடுப்பானார் வக்காஸ். இதுதொடர்பாக பிரச்சினை ஏற்படவே போலீஸில் இரு தரப்பும் புகார் கொடுத்தது.

இந்த நிலையில் இஜாஸ், பிரச்சினையை எம்.பி. நிவானியிடம் கொண்டு சென்றார். அவர் இரு தரப்பையும் அழைத்து பஞ்சாயத்து செய்தார். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து ஆகஸ்ட் 6ம் தேதி இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார் நிவானி.

இது சரிப்படாது என்று முடிவு செய்த வக்காஸ், தனது தந்தை நஸர் ஹூசேனுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் உறவினரான ஆரிப்கானிடம் சென்றனர். அவர் ஆள் வைத்து அத்தனை பேரையும் தீர்த்து விடலாம் என ஐடியா கொடுத்துள்ளார். அவர் கூறிய யோசனைதான் தற்கொலைத் தாக்குதல்.

பின்னர் வக்காஸ், நஸர், ஆரிப் ஆகியோர் சேர்ந்து வானா நகரைச் சேர்ந்த ஜான் முகம்மது வஸீர் என்பவரை அணுகினர். அவரிடம் ரூ. 10.2 லட்சம் பணம் தர ஒப்புக் கொண்டனர். பதிலுக்கு தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவரையும், வெடிகுண்டு நிபுணர் ஒருவரையும் வழங்குவதாக உறுதியளித்தார் வஸீர்.

ஆகஸ்ட் 5ம் தேதி இவர்கள் இருவரையும், ஆரிப்பிடம் ஒப்படைத்தார் வஸீர். 6ம் தேதி இஜாஸ், நிவானியின் வீட்டில் பஞ்சாயத்துக்காக வந்திருந்தார். உள்ளூர் மக்கள் ஏராளமான பேரும் அங்கு வந்திருந்தனர். அப்போது உள்ளே புகுந்த தற்கொலைப் படை நபர், குண்டை வெடிக்கச் செய்தார். இதில்தான் நிவானி உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர்.

தனிப்பட்ட பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள தற்கொலைப் படை என்ற புதிய ஆயுதத்தை பாகிஸ்தானில் கையில் எடுக்க ஆரம்பித்திருப்பது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X