யுகே-6 லட்சம் ஊழியர் வேலைக்கு ஆபத்து
புத்தாண்டு தினம் நெருங்கும் நேரத்தில், இந்த அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளவர்கள் பிரிட்டனைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு நிறுவனமான சார்ட்டட் இன்ஸ்டிட்யூட் ஆப் பர்சனல் அண்ட் டெவலப்மெண்ட் (CIPD).
இவர்களது அறிக்கைப்படி பிரிட்டனில் மட்டும் வரும் 2009ம் ஆண்டு முடிவில் வேலை இல்லாதோரின் எண்ணிக்கை மட்டும் 3 மில்லியன் (30 லட்சம்) அளவுக்கு இருக்கும். குறிப்பாக இப்போது பிறக்கும் புத்தாண்டில் மட்டும் சுமார் 6 லட்சம் பேர் வேலை இழப்பார்கள்.
அதுவும் புத்தாண்டு தொடங்கி ஈஸ்டர் பண்டிகை வரையுள்ள 4 மாதங்களில் மிக அதிக அளவில் வேலை இழப்புகள் இருக்குமாம்.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெருக்கடியை, வணிக நிறுவனங்களும் தனிநபர்களும் சந்திக்க வேண்டி வரும் என்கிறது.
இங்கிலாந்தின் பிரபல ஆடை விற்பனை நிறுவனமான ஆடம்ஸ் வீழ்ந்ததைத் தொடர்ந்து ஒரே நாளில் 2000 பேர் வேலை இழந்துள்ளனர்.
வரும் ஜனவரி 5ம் தேதி வுல்வொர்த்ஸ் நிறுவனம் மூடப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் வேலை இழப்போர் மட்டும் 27,000 பேர்.
2009ல் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் போனஸ் போன்ற எதுவும் தரப்படமாட்டாது என பெரும்பாலான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 40 சதவிகிதத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஊதிய உயர்வை எதிர்பார்க்கவும் இல்லையாம். இருக்கிற வேலை நீடித்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் இந்த நிலை நிச்சயம் தனி நபர் உற்பத்தித் திறனை பாதிக்கும் என்பதால், நிறுவனங்கள் மாற்று வழிகளைச் சிந்திக்க வேண்டும் அந்த மனித வள அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இந்த மனநிலையில் பணியாற்றும் ஊழியர்களால் உற்பத்தி பாதிக்கும். எனவே தகுந்த ஊக்கத் தொகை அளிப்பதே நல்ல பலன்களைத் தரும், என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.