திருமங்கலம் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது
மதுரை: அனல் பறக்க நடந்து வந்து திருமங்கலம் தொகுதி தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து தொகுதியில் உள்ள வெளியூர்க்காரர்கள் வெளியேறி விட்டனரா என்று தேர்தல் ஆணையம் நியமித்துள்ள சிறப்புக் குழுக்கள் கண்காணிப்பைத் தொடங்கியுள்ளன.
திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீர. இளவரசன் மரணமடைந்ததையடுத்து அத்தொகுதியில் ஜன-9ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
அதிமுக சார்பில் ம.முத்துராமலிங்கம், திமுக சார்பில் லதா அதியமான், தேமுதிக சார்பில் தனபாண்டியன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் உள்ளிட்ட 26 பேர் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டனர்.
முதல்வர் கருணாநிதி திருமங்கலத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். நேற்று ஜெயலலிதா பேசினார்.
பிரச்சாரம் இன்று மாலை 5 மணியோடு நிறைவடைந்தது. கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகள் சார்பிலும் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. வாக்காளர்களை வீடு வீடாக சென்று கட்சியினர் சந்தித்து கையெடுத்து கும்பிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திருமங்கலம் தொகுதியில் மொத்தம் 190 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. மொத்தம் 26 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடி யிலும் இரண்டு வாக்குப் பதிவு மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளன.
இதற்காக மின்னணு எந்திரங்கள், வேட்பாளரின் பெயர், சின்னம் பொறிக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் உள்ளன. தேர்தலுக்காக 19 மண்டல அலுவலர் கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 190 தலைமை அலுலவர்களும், 850 அலுவலர்களும் தேர் தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொகுதியில் உள்ள பதட்டமான பகுதிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
வெளியூர்க்காரர்கள் வெளியேற்றம் ..
தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து திருமங்கலத்தில் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள், வாக்காளர்கள் அல்லாதவர்கள் இருக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வெளியூர்க்கார்ரகள் 5 மணியுடன் வெளியேறி விட வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் வெளியேறி விட்டனரா என்பதை கண்காணிக்க பல்வேறு குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவினர் தொகுதி முழுவதும் சென்று தீவிர கண்காணிப்பி்ல ஈடுபடுவர்.
வாக்காளர்களே ஏஜென்டுகள் ..
இதற்கிடையே திருமங்கலம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் ஏஜென்டுகளாக அந்த தொகுதியை சேர்ந்த வாக்காளர்களையே நியமிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கேட்டுக் கொண்டுள்ளார்.
வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டர் தொலைவில் நியமிக்கப்படும் ஏஜென்டுகள் மற்றும் வாக்குச் சாவடி ஏஜென்டுகள் அந்த தொகுதியை சேர்ந்த வாக்காளர்களாகவே இருக்க வேண்டும். அவர்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டை அல்லது தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ள 9 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டிய பின்னரே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
அடையாள அட்டை இல்லாமல் வருவோர் வரிசையில் கூட நிற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் நரேஷ் குப்தா கூறியுள்ளார்.