சத்யம் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தின் நிறுவனரும், இந்திய ஐடி துறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டவருமான ராமலிங்க ராஜூவின் மோசடிகள் குறித்து விசாரிப்பதற்காக அவரை செபி அலுவலகத்தில் ஆஜராகுமாறு இன்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இன்று மாலை 4.30 மணிக்கு அவரது கார்ப்பரேட் அலுவலகத்தில் இதுகுறித்த சம்மன் சமர்ப்பிக்கப்பட்டது. ராஜுவின் வழக்கறிஞர் பரத் குமார் அதைப் பெற்றுக் கொண்டார். விசாரணைக்கு ராஜூ நேரில் செல்வாரா அல்லது பரத்குமார் மட்டும் செல்வாரா தெரியவில்லை.
மேலும் சத்யம் நிறுவனம் மற்றும் அதனோடு தொடர்புடைய அனைத்து கணக்குகளையும் முடக்கியுள்ளது சிட்டி வங்கி.
கெஸ்ட் அவுசில் ஓய்வெடுக்கும் ராஜூ!:
இதற்கிடையே ராமலிங்க ராஜூ, தனது விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுப்பதாகக் கூறப்படுகிறது.
இன்று அவரது வீடுகளில் சோதனை நடத்திய செபியின் தீவிர குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மத்திய அரசின் கம்பெனி விவகாரத் துறை அதிகாரிகள் ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளனர்.
சத்யம் நிறுவனத்தின் ஹைதராபாத் அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர்.
இன்று மாலை அல்லது இரவு ராஜூவைக் கைது செய்யக் கூடும் என்று தெரிகிறது.
இப்படி ஒரு எஸ்எம்எஸ்.. இப்படி ஒரு லாபம்:
இதற்கிடையே, இன்று காலை முதலே சத்யத்தின் பல க்ளையண்டுகளும் டிசிஎஸ், இன்போஸிஸ்ஸூக்கு மாறிவிட்டதாக சிலர் பங்குச் சந்தை தரகர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியவண்ணம் இருந்தனர். இதைத் தொடர்ந்து இன்றைய பங்கு வர்த்தக சரிவையும் தாண்டி இந்த இரு நிறுவனங்களின் பங்குகள் மட்டும் கணிசமாக விலை ஏற்றம் கண்டன.
இதனால் இன்றைய வர்த்தகத்தில் இன்போஸிஸ், டிசிஎஸ், விப்ரோ பங்குகள் கூடுதல் விலைக்குப் போயின. வர்த்தக நேர முடிவில் சத்யம் பங்குகள் மட்டும் 21 ரூபாயாக இருந்தது.
சத்யத்தின் இன்றைய நிலை மற்ற மூன்று ஐடி நிறுவனங்களுக்கும் பெரும் லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளது என்பதே உண்மை.
இனி சந்தையில் சத்யம் பங்குகள் கிடையாது:
வரும் ஜனவரி 12ம் தேதி முதல் இந்திய பங்குச் சந்தையில் சத்யம் நிறுவனப் பங்குகள் நீக்கப்படுகின்றன. இதுகுறித்து நிப்டி, சென்செக்ஸ் இரண்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
ஏற்கெனவே அமெரிக்க பங்குச் சந்தையிலிருந்து சத்யம் நீக்கப்பட்டுவிட்டது.
சத்யம் முதலீட்டு வங்கிகளான அபர்தீன், டிஎஸ்பி மெர்ரில் லிஞ்ச், சிட்டி கார்ப் மொரீஷியஸ், மார்கன் ஸ்டான்லி மொரீஷியஸ், ஸ்விஸ் பைனான்ஸ் உள்பட அனைத்து நிறுவனங்களும் இன்று தங்களிடம் இருந்த சத்யம் பங்குகள் அனைத்தையும் விற்றுவிட்டனர்.
வங்கிக் கணக்குகள் முடக்கம்:
சிட்டி வங்கியில் சத்யம் வைத்திருந்த வங்கிக் கணக்கு முழுவதுமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சிட்டி வங்கி வெளியிட்டுள்ளது. இதனால் வங்கியில் இருந்த 300 கோடிக்கும் மேற்பட்ட தொகை முடங்கிவிட்டது.
இந்திய ஐடி துறைக்கு மட்டும் 70 மில்லியன் டாலர்களைக் கடனாக அளித்துள்ளது சிட்டி வங்கி. சத்யமும் இதில் அடங்கும்.
கையிருப்பில் பணம் இல்லாததால், நிர்வாகச் செலவுகளுக்கு பணம் புரட்டுவதும், சம்பளம் கொடுப்பதும் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்து நிற்கிறது சத்யம் புதிய நிர்வாகம் முன்னால்.