நாவரசு கொலை வழக்கு-சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்!
சென்னை: தமிழகத்தையே உலுக்கிய மருத்துவ கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து 10 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் சுப்ரீ்ம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளனர்.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமியின் ஒரே மகனான நாவரசு, சிதம்பரம்அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மருத்துவம் படித்து வந்தார்.
இவர் கடந்த 1996 ம் மூன்றாம் ஆண்டு மாணவர் ஜான் டேவிட்டால் ராக்கிங் செய்யப்பட்டு தலை, கை, கால் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து போலீசார் ஜான் டேவிட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்ற நீதிபதி கடந்த 1998 மார்ச் 11ம் தேதி ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இத்தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜான் டேவிட் அப்பீல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேவையான சாட்சிகள் திருப்திகரமாக இல்லை என கூறி ஜான் டேவிட்டை விடுதலை செய்தது.
தற்போது 10 வருடங்களுக்கு பிறகு இதனை எதிர்த்து அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் கண்ணன் டில்லி சென்று சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் 10 வருடங்களுக்கு பிறகு அப்பீல் செய்தது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.