பிரபாகரனைப் பிடிக்க அதிரடிப்படை!

விடுதலைப் புலிகள் வசம் உள்ள கடைசிப் பகுதியான முல்லைத் தீவைப் பிடிக்க ராணுவம் மும்முரமாக உள்ளது. விரைவில் முல்லைத் தீவைப் பிடித்து விடுவோம் என ராணுவம் கூறி வருகிறது.
பிரபாகரன் முல்லைத் தீவில்தான் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் தப்பிச் சென்றிருக்கலாம் என்று ராணுவ தளபதி சரத் பொன்சேகா சமீபத்தில் கூறியிருந்தார்.
இந் நிலையில் பிரபாகரனை உயிருடன் பிடிக்க தனி அதிரடிப்படையை ராணுவம் அமைத்துள்ளது. பிரபாகரன் பதுங்கியிருக்கும் இடம் குறித்த தகவல் வந்தவுடன் விரைந்து செல்லும் வகையில் இந்தப் படை வைக்கப்பட்டுள்ளதாம். தனி விமானமும் தயாராக உள்ளதாம்.
இந்த அதிரடிப்படை வீரர்கள், பிரபாகரன் பதுங்கியிருக்கும் இடம் உள்ள பகுதியில் பாராசூட் மூலம் குதித்து அவரைப் பிடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களின் நடமாட்டத்தையும் சிறப்பு அதிரடிப்படை தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது கடல் மார்க்கமாகவே விடுதலைப் புலிகள் தப்பிச் செல்ல முடியும் என்பதால் முல்லைத்தீவு கடல் பகுதி முழுவதையும், கடற்படை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
ஆனால் ராணுவத்தால் பிரபாகரனை அவ்வளவு எளிதில் பிடித்து விட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம், பிரபாகரனைப் பாதுகாக்க பல முக்கிய பயிற்சிகளைப் பெற்ற வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களைத் தாண்டித்தான் பிரபாகரனை நெருங்க முடியும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, புதுக்குடியிருப்பு மற்றும் விஸ்வமேடு ஆகிய இரு பகுதிகளுக்கும் இடையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் உள்ள அதி நவீன, பங்கரில் பிரபாகரன் பதுங்கியிருக்கலாம் என ராணுவம் சந்தேகிக்கிறது.
மேலும், அவர் ஒரே பங்கரில் இருப்பதில்லை என்றும் புலிகள் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ள பல்வேறு ரகசிய பங்கர்களில் அவர் மாறி மாறி பதுங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications