சத்யம்: 43,622 பேர் பணியாற்றுகின்றனர் - பி.எப். அலுவலகம்
இந்தத் தகவலை ஹைதராபாத்தில் உள்ள பிராந்திய பொது சேம நல நிதிக் கழக அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், ராமலிங்க ராஜுவும், பிற நிர்வாகிகளும் தங்களது அலுவலகத்திற்கு, ஊழியர்களின் பங்காக செலுத்த வேண்டிய ரூ. 7.5 கோடியை கட்டவில்லை என்றும் பி.எப். அலுவலகம் சார்பில் ராம்கோபால்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகாரும் தரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பாக்கித் தொகை நிலுவையில் உள்ளதாம்.
பி.எப். அலுவலகம் கொடுத்துள்ள இந்தத் தகவல், சத்யம் நிறுவனத்தை நிர்வகிக்க அரசு நியமித்துள்ள போர்டுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், 52 ஆயிரம் ஊழியர்கள் வேலை பார்ப்பதாக இந்த போர்டு இருமுறை உறுதிபடத் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞரோ, அத்தனை பேர் சத்யம் நிறுவனத்தில் இல்லை என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறார். சத்யம் நிறுவனத்தில் 40 ஆயிரம் பேர்தான் இருக்கின்றனர். ஆனால் கூடுதலாக 12 ஆயிரம் பேரைக் கணககில் காட்டி பல கோடி பணத்தை மாதாமாதம் ராஜு சகோதரர்கள் சுருட்டி வந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
அரசு வழக்கறிஞரின் வாதத்தை தற்போது கிட்டத்தட்ட பி.எப். அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.