இளங்கோவனுக்கு கொலை மிரட்டல் - தங்கபாலுவுக்கு 2வது மிரட்டல்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுக்கு இம்மாதத்தில் இரண்டாவது முறையாக கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இவரை தவிர்த்து மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எம்.எல்.ஏக்கள் ஞானசேகரன், கார்வேந்தன் ஆகியோருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ம் தேதி சென்னை அடையாரில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு வீட்டுக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அதேபோல் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கும் தொலைபேசியில் மிரட்டல் அழைப்புகள் வந்தன.
இதையடுத்து தங்கபாலு தனக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என போலீசில் மனு அளித்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் தங்கபாலுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் காரியகமிட்டி செயலாளர் தாமோதரன் கூறுகையில்,
சத்தியமூர்த்தி பவனுக்கு இன்று காலை கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் சில தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டது.
அதில் குடியரசு தினம் முடிந்து விட்டது. இலங்கையில் போரை நிறுத்த மத்திய அமைச்சர் பிரணாப் போய் விட்டார். மிகவும் மகிழ்ச்சி. போரை நிறுத்தாவிட்டால், தங்கபாலு, இளங்கோவன், ஞானசேகரன், கார்வேந்தன் நால்வரில் ஒருவர் பலியாகிவிடுவர். மத்திய அரசே இதை புரிந்து கொள்.
இனி கடிதம் இல்லை. செயல் தான் என அக்கடிதத்தில் உள்ளது. கடிதத்தை அனுப்பிய மர்ம கும்பல் அதை கம்ப்யூட்டரில் டைப் செய்து அனுப்பி உள்ளது. அது எங்கிருந்து, யாரால் அனுப்பப்பட்டது என்ற விபரம் எதுவும் அதில் இல்லை. இது குறித்து போலீசிடம் புகார் கொடுத்துள்ளோம் என்றார் தாமோதரன்.