முல்லைத்தீவுக்கு 3000 இந்திய வீரர்கள் பயணம்?
இவர்கள் அனைவரும் நேற்று மாலை கொழும்பு சென்றடைந்ததாகவும், மாலையில் வன்னிப் பகுதிக்கு புலிகளுடன் போரிட விரைந்ததாகவும் கொழும்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்தியை ராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ராஜபக்சே மூலம் 48 மணிநேர தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதே, இந்திய ராணுவம் முல்லைத் தீவைச் சென்று அடையத்தான் என்றும் கூறப்பட்டுள்ளது.
முல்லைத்தீவின் வீதிகளில் இப்போது இலங்கை ராணுவத்துடன் கூட்டாக இறங்கி போர் நடவடிக்கைகள் நடத்திக் கொண்டிருப்பது இந்திய ராணுவமே என புலிகள் தரப்பிலும் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் டெல்லி வருவதற்கு முன்பே இலங்கைக்கு இந்தியத் துருப்புகளை அனுப்பப்பட்டு விட்டதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அண்மையில் புலிகளால் தகர்க்கப்பட்ட கல்மடு அணையின் போது ஏற்பட்ட இழப்பில் இந்திய - இலங்கைப் படைகள் மிக மோசமான இறப்புகளை சந்தித்ததாகவும், அதை ஈடுகட்டவே, இன்றைக்கு 3,000 இந்தியப் படைகள் இலங்கை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே ஏராளமான டாங்குகள், ஆயுத தளவாடங்களை இந்தியா அனுப்பியுள்ளதையும் புலிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
புலிகளுக்கெதிரான போராக அறிவித்த இலங்கை அரசு, ஒவ்வொரு நாளும், அங்குள்ள தமிழர்களை கொன்று வருவதும், பொது மக்களுக்கு உண்ண உணவோ, காயமடைந்தவர்களுக்கு மருந்துகளோ இல்லாத நிலையில், 3,000 இந்திய இராணுவத்தினர் அங்கு செல்வது, அங்கு அவதிப்படும் தமிழ் மக்களின் நிலையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.