ஆஸ்திரேலியாவில் பயங்கர காட்டு தீ-130 பேர் பலி
ஹீல்ஸ்வில்லி (ஆஸ்திரேலியா): ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீக்கு இதுவரை 130 பேர் பலியாகியுள்ளனர். தீயை அணைக்க முடியாமல் ஆஸ்திரேலிய அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே மிகவும் மோசமான காட்டுத் தீயாக இது கருதப்படுகிறது. பல நகரங்கள் இந்த காட்டுத் தீயில் சிக்கி பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
இன்று காலை வரை காட்டுத் தீக்கு 130 பேர் பலியாகியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் தென் கிழக்குப் பகுதியில் கடும் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது. 100 டிகரிக்கு மேல் வெயில் வெளுத்தி வாங்கி வருகிறது.
இந்த நிலையில் மெல்போர்ன் நகருக்கு அருகே உள்ள காட்டுப் பகுதியில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. காற்றும் பலமாக வீசியதால் காட்டுத் தீ படு வேகமாக பரவத் தொடங்கியது.
கிட்டத்தட்ட 2 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பளவுக்கு காடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. இந்த காட்டுத் தீயின் தாக்கம் அருகில் உள்ள சிறிய நகரங்களுக்கும் பரவியதில் 1000 வீடுகள் வரை சேதமடைந்துள்ளன. அங்கு வசித்து வந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
வீடுகள், கார்கள் உள்ளிட்ட பெருமமளவிலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 130 பேர் பலியாகியுள்ளனர். தீயணைப்புப் படையினர், ராணுவம், விமானப்படை என சகல தரப்பினரும் கடும் முயற்சி மேற்கொண்டு தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
ஆனால் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருப்பதாகவும், காற்று பலமாக வீசி வருவதால் அணைப்புப் பணிகள் கடும் தடையை சந்தித்துள்ளதாகவும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 100 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் இந்த அளவுக்கு பெரிய தீவிபத்து ஏற்பட்டதில்லை என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காட்டுத் தீயால் கடும் பாதிப்பை சந்தித்திருக்கும் மேரிஸ்வில்லி, கிங்ஸ்லேக் ஆகிய இரு நகரங்களுக்கும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஊர்களிலும்தான் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
தீப்பிடித்து எரிந்து வரும் காட்டுப்பகுதியில் இருந்த பெரும்பாலான மரங்கள் கருகிப் போய் விட்டன. அந்தப் பகுதியே கரும் புகை மண்டலமாக காணப்படுகிறது.