இலங்கை: பிரதமர் எழுதிய கடிதம்-காட்டிய வைகோ
சென்னை: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மு.கண்ணப்பனின் ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதிமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் டி.கே.சுப்பிரமணியம், அமைப்புச் செயலாளர் செ.தம்புராஜா, கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியச் செயலாளர் அ.அறிவரசு, தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.சந்திரசேகரன்,
கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.எஸ்.கருப்புசாமி, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியச் செயலாளர் ஞானசேகர், கோவை மாநகராட்சி கவுன்சிலர் தங்கவேலு உள்ளிட்டோர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருமே சமீபத்தில் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அவைத் தலைவர் மு.கண்ணப்பனின் ஆதரவாளர்கள் ஆவர்.
இலங்கையை காக்க இந்தியப் படைகள்-வைகோ:
இந் நிலையில் சேலத்தில் நடந்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்கும் வேலையில் ராஜபக்சே அரசு இறங்கியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசக் கூடாது என்றும் கூறியுள்ளன.
ஆனால் இந்திய அரசு இதுவரை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தவில்லை. ஒப்புக்கு ஓரிருமுறை சொன்னதே தவிர. அது, 'நான் அடிப்பதுபோல் அடிக்கிறேன், நீ அழுவது போல் அழு' என்பதே.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்தியாதான் காரணம். பிரதமர் மன்மோகன் சிங், கடந்த அக்டோபர் 2ம் தேதி எனக்கு எழுதியிருந்த கடிதத்தில், இலங்கையில் நடக்கும் பிரச்சினை உள்நாட்டு விவகாரம். இலங்கையின் ஒருமைப்பாட்டை காக்க இந்திய அரசு ராணுவ உதவி செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். ராணுவ உதவிகள் மட்டுமின்றி, பண உதவியும் இந்திய அரசு செய்து வருகிறது என்ற வைகோ மன்மோகன் சிங் தனக்கு அனுப்பிய கடித நகலையும் நிருபர்களிடம் காட்டினார்.
ரேடார் தந்தோம்-இளங்கோவன்:
இதற்கிடையே மதுரையில் நிருபர்களிடம் பேசிய மத்திய ஜவுளி்த்துறை இணையமைச்சர் இளங்கோவன்,
நாடாளுமன்றத் தேர்தலில் கட்டாயம் இலங்கைப் பிரச்சனையும் எதிரொலிக்கும். இலங்கைக்கு மத்திய அரசு ராணுவ உதவி செய்யவில்லை. ரேடார் என்பது தொலைத் தொடர்பு சாதனம், அது கொலைக் கருவியல்ல. ஆசிய நாடுகள் ஒப்பந்தப்படி அது வழங்கப்பட்டுள்ளது என்றார்.