உ.பி: மாயாவதியின் பிராமணர்-தலித் 'பார்முலா'
மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. ஆட்சியில் உள்ள உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 இடங்களுக்கும் வேட்பாளர் பட்டியலை அக் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று வெளியிட்டார்.
இதில் மூன்றில் ஒரு பகுதி இடங்களை முற்பட்ட வகுப்பினருக்கு வழங்கியுள்ளார் மாயாவதி. இதில் 20 இடங்களில் பிராமணர்களையும் 8 இடங்களில் தாகூர் இனத்தினரையும் களமிறக்கியுள்ளார் மாயாவதி.
அதே போல தலித்களுக்கு 22 இடங்களையும் முஸ்லீம்களை 14 இடங்களிலும் நிறுத்தியுள்ளார் மாயாவதி.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தலித்-பிராணர்கள் கூட்டணியை அமைத்துத் தான் ஆட்சியைப் பிடித்தார் மாயாவதி என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் அதே பார்முலாவுக்கு இறங்கியுள்ளார்.
இந்த வேட்பாளர் பட்டியலில் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய பலரும் அடங்குவர். இந்தப் பட்டியலில் உள்ள டிபி யாதவ், முக்தார் அன்சாரி, அப்சன் அன்சாரி, தனஞ்சய் சிங், அருண் சுக்லா, அன்னா ஆகியோர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்துள்ளார் மாயாவதி.