முக்கிய கோயில்களுக்கு ராணுவ பாதுகாப்பு?
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து திருவனந்தபுரம் 9வது பாதுகாப்பு பிரிவு (மிலிட்டரி இன்பான்ட்ரி பிரிகேட்) கேப்டன் குருபீந்தர் சிங் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் ராமநாதசாமி கோயிலை பார்வையிட்டனர்.
கோயிலில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த ராணுவ குழுவினர் இதை தொடர்ந்து விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களிலும் பாதுகாப்பு சம்பந்தமாக ஆய்வு நடத்துகின்றனர்.
கோயில்கள் மட்டுமல்லாது சுற்றுலா தலங்களுக்கும் ராணுவ குழுவினர் சென்று ஆய்வு நடத்துகின்றனர். நெல்லை மாவட்டதை பொறுத்தவரை நெல்லையப்பர் கோயில், தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், சங்கரன்கோவில் சங்கரலிங்கசாமி கோயில், ஆகிய முக்கிய கோயில்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில், தூத்துக்குடி பனியமாதா ஆலயம் உள்ளிட்ட முக்கிய கோயில்கள் உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் குற்றாலம், அகஸ்தியர் அருவி, தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை, வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை, முயல்தீவு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் ராணுவம் தி்ட்டமிட்டுள்ள கோயில்கள், சுற்றுலா தலங்களில் ஆய்வு நடத்தவுள்ளது.
அதன் பின்னர் அக்குழுவினர் ராணுவ தலைமையிடம் அறிக்கை அளிப்பர். அறிக்கையின் அடிப்படையில் எந்த கோயில்கள், சுற்றுலா இடங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குவது என்பதை மத்திய அரசு முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.