கருணாநிதிக்காக ராஜாத்தி அம்மாள் ஹோமம்
கும்பகோணம்: முதல்வர் கருணாநிதி நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள் திருக்கடையூர் கோவிலில் ஆயில்ய ஹோம் செய்தார்.
கருணாநிதி மதம், சாதி, ஆன்மீகம் போன்ற நம்பிக்கையில் மாறுபட்ட கருத்து கொண்டவர். பெரியார் வழியில் நடப்பதாக அடிக்கடி பெருமையாக கூறிக் கொள்வார்.
இந்துக் கடவுள்கள் குறித்து அவர் முன்பு பேசியவை இன்றும் கூட விமர்சிக்கப்பட்டு வருகின்றன. அவரும் தனது விமர்சனங்களை நிறுத்தியதில்லை.
இந்த நிலையில் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் கும்பகோணம் அருகில் உள்ள திருக்கடையூர் அமிர்தகேடஸ்வர் கோயிலுக்கு திடீரன வந்தார்.
அங்கு முதல்வர் கருணாநிதிக்கு நீண்ட ஆயுள் வேண்டி ஆயில்ய ஹோமம் கோவில் நந்தி மண்டபத்தில் விஸ்வநாத குருக்கள் தலைமையில் நடத்தப்பட்டது.
துணைவியார் ராஜாத்தி பெயரில் ஹோமம் நடந்தது. இரவு 7.30 மணியளவில் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்து ஆயில்ய ஹோம பிரசாதத்தை ராஜாத்தி பெற்றுக் கொண்டார்.
அடுத்து எதிரிகளை வீழ்த்தும் வகையில் கும்பகோணம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யாவாடி பத்ரகாளிஅம்மன் கோயிலிலும் விசேஷ பூசைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றதாம்.
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 60 வயது முடிந்தவர்களுக்கு சஷ்டியப்த பூஜை, 70 வயது முடித்தவர்களுக்கு பீமரத சாந்தி, 80 வயதுக்கு சதாபிஷேகம் மற்றும் நீண்ட கால ஆயுள் வேண்டி ஆயில்ய ஹோமம் நடத்தப்படுது வழக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.