சரணடைந்தார் வருண் காந்தி-சிறையில் அடைப்பு
முஸ்லீம்களுக்கு எதிராக விஷமமாக பேசியது தொடர்பாக பிலிபித் தொகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தில் வருண் காந்தி மீது தேர்தல் ஆணையத்தின் புகாரின் பேரில் இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.
இதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகினார் வருண் காந்தி. ஆனால் அவரது மனு அங்கு தள்ளுபடியானது. மேலும், அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீன் நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் மேலும் முன்ஜாமீன் கோர வேண்டாம் என பாஜக அவருக்கு அறிவுறுத்தியது.
இதன்மூலம் கோர்ட்டில் சரணடைந்து சிறைக்குச் சென்று அனுதாபத்தைப் பெற்றால் தேர்தல் நேரத்தில் ஓட்டு வாங்க உதவும் என்பதால் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.
வருண் காந்தி கோர்ட்டில் சரணடையும் போது கூடவே இருக்குமாறு உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் கல்ராஜ் மிஸ்ரா மிஸ்ராவுக்கு பாஜக உத்தரவிட்டது. இதையடுத்து ஏராளமான தொண்டர்களையும் வேன், லாரி, பஸ்களில் ஏற்றிக் கொண்டு பிலிபித் வந்தார் கல்ராஜ் மிஸ்ரா.
இதையடுத்து இன்று காலை பிலிபித் கோர்ட்டுக்கு ஊர்வலமாகக் கிளம்பினார் வருண் காந்தி. அவரது வருகையைத் தொடர்ந்து கோர்ட் வளாகத்தில் பெரும் திரளாக பாஜகவினர் குவிந்தனர். அவர் ஊர்வலம் வந்த பாதை முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த சரண்டர் ஊர்வலத்தின் இறுதியில், தலைமை நீதித்துறை நடுவர் கோர்ட்டுக்குள் நுழைந்தார் வருண் காந்தி. பின்னர் அவரது வக்கீல், சரணடைவது தொடர்பான மனுவை நீதிபதியிடம் அளித்தார்.
அதைப் பரிசீலித்த நீதிபதி, வருண் காந்தியை திங்கள்கிழமை வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
சரணடைவதற்கான மனுவை தாக்கல் செய்த பின்னர் கூடியிருந்த செய்தியாளர்களிடையே வருண் காந்தி பேசுகையில், நான் கொள்கைகள், லட்சியங்களில் நம்பிக்கை கொண்டவன். அதற்காக சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறேன்.
சிறைக்குப் போவதன் மூலம் தங்களது உரிமைகளுக்காக போராட மக்களுக்குப் பலம் கிடைக்கும். அதற்காக சிறை செல்கிறேன்.
மக்களுக்காக போராட விரும்புகிறேன். நீதித்துறை மீதும், சட்டத்தின் மீதும் எனக்கு நிறைய நம்பிககை உண்டு என்றார்.
முன்னதாக கோர்ட் பகுதியில், திரண்டிருந்த தொண்டர்களை கலைக்க போலீஸார் முற்பட்டபோது அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சில பாஜக தொண்டர்களும் சில போலீசாரும் காயமடைந்தனர்.
வருண் விவகாரத்தைத் தொடர்ந்து பிலிபித் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்வானி நடத்திய டிராமா-காங்கிரஸ்:
இந்த சரண்டர் டிராமா நாடகத்தை நடத்தியதே பாஜக தலைவர் அத்வானி தான் என மூத்த காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான கபில் சிபல் கூறியுள்ளார்.