வருணை கொல்ல தாவூத் சதி-4 பேர் கைது
லக்னெள: தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாஜக வேட்பாளர் வருண் காந்தியை கொலை செய்ய நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கும்பல் திட்டம் தீட்டியிருப்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இருக்கும் பாஜகவின் இளம் தலைவர் வருண் காந்தி, அங்கு நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இவருக்கு ஆதரவாக பிலிபித்தில் இன்று பந்த் நடத்த விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இதையடுத்து அவர் பிலிபித் சிறையில் இருந்து எடவா சிறைக்கு இன்று காலை மாற்றப்பட்டார்.
இந்நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசிய வருணை கொல்ல, மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
தாவூத்தின் வலது கரமாக கருதப்படும் சோட்டா ஷகீல், ரஷித் மல்பாரி என்னும் தீவிரவாதியுடன் தொலைபேசியில் பேசி கொண்டிருந்ததை ஒட்டு கேட்ட உளவுத்துறை இந்த சதித் திட்டம் குறித்து உத்தரப் பிரேதச உள்துறை அமைச்சகத்துக்கும் தகவல் கொடுத்துள்ளது.
மல்பாரி குறிவைத்து சுடுவதில் கெட்டிக்காரன் என்பதால் இவன் மூலம் நீதிமன்றத்துக்கு வரும் வருண் காந்தியை கொல்ல சோட்டா ஷகீல் சதி தீட்டியுள்ளான்.
இது தொடர்பாக இவர்கள் இருவரும் கடந்த மார்ச் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை பலமுறை மொபைலில் பேசியுள்ளனர். 38 வயதான மல்பாரி கடந்த 2004ல் இன்னொரு தாதாவான சோட்டா ராஜனை பாங்ஹாக்கில் வைத்து சுட்டு கொல்ல முயற்சித்தவன் ஆவான்.
கடந்த பல ஆண்டுகளாக மும்பை போலீசால் தேடப்பட்டு வந்த இவன் மலேசியாவில் தலைமறைவாக இருந்தார்ன் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் தான் நேபாளம் வழியாக இந்தியா வந்துள்ளான். இந்நிலையில் வருணைக் கொல்ல டெல்லி வழியாக பிலிபித் செல்ல கிளம்பி கொண்டிருந்த மல்பாரியை போலீசார் மங்களூரில் கைது செய்தனர்.
இதன் காரணமாக தான் வருண் எடவா ஜெயிலுக்கு மாற்றப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. வருணைத் தொடர்ந்து ஸ்ரீராம் சேனா தலைவர் முத்தாலிக்கையும் கொல்ல சோட்டா ஷகீல் திட்டமிட்டிருப்பதாக உளவு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சதி தி்ட்டத்தில் தொடர்புடைய சயாப், முகமது ஹசிம், சாஹிப் இப்ராகிம் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கை துப்பாக்கி, 11 மொபைல் போன் மற்றும் பல கிரடிட் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.