காங்.கிடம் பணம் வாங்கி விஜயகாந்த் தனித்து போட்டி-சேதுராமன்
திண்டுக்கல்: நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட விஜயகாந்த் காங்கிரசிடம் இருந்து கோடி கணக்கில் பணம் வாங்கியுள்ளார் என மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் சேதுராமன் குற்றம் சாட்டினார்.
திண்டுக்கலில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் தேர்தல் ஆய்வுக்கூட்டம் கிறிஸ்துவ வன்னியர் மஹாலில் நடந்தது. இதில் நிறுவனத் தலைவர் டாக்டர் சேதுராமன் கலந்து கொண்டார்.
கூட்டத்துக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு துரோகம் விளைவித்து வருகிறது. ஊழல்களில் தெரிந்த ஊழல், தெரியாத ஊழல் என 2 வகை ஊழல் செய்துள்ளது. இதனால் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
வருகிற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறாது.
கூட்டணி அமைப்பது சம்பந்தமாக விஜயகாந்த் காங்கிரஸ் கட்சியுடன் பேசியுள்ளார். கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டு தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆலோசனையின் பேரில் தனியாக நிற்கிறார். இவர் ஊழலை பற்றி பேசுகிறார். இவர் கனவு பலிக்காது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்.
நாங்கள் அதிமுகவுடன் தோழமை ரீதியில் தேர்தல் கூட்டணி வைத்துள்ளோம். தேர்தலில் நாங்கள் போட்டியிடாமல் கூட்டணியில் மட்டும் அங்கம் வகிக்கிறோம். அதிமுக வெற்றிபெற நாங்கள் கடுமையாக உழைப்போம் என்றார் சேதுராமன்.












Click it and Unblock the Notifications