தமிழகத்தில் தொடரும் மழை-உப்பளங்கள் மூழ்கின
சென்னை: தமிழகத்தின் தென் பகுதிகளில் பெய்து வரும் மழை மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் தென் மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இதனால் தென் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகிறது.
கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
பல பகுதிகளில் விட்டு விட்டு கன மழை பெய்து வருவதால் வெயில் கொடுமை அடியோடு நீங்கியுள்ளது.
இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்க கடலில் இலங்கையை ஒட்டி மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.
மண்டபத்தில் அதிகபட்சமாக 15 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், வடக்கு கடலோர மாவட்டங்களிலும் இடியுடன் கூடி கன மழை பெய்யும்.
சென்னையில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். லேசான மழையை எதிர்பார்க்கலாம். பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை 34 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
ஒரத்தநாட்டில் 13 செ.மீ, நாகப்பட்டனம் 10 செ.மீ, ராமேஸ்வரம் 9, காரைக்கால், திருவாரூர், பாம்பன், ஆர்.எஸ்.மங்கலம் தலா 8, ராமநாதபுரம், திருவாடானை, தொண்டி, திருப்புவனம் தலா 7 செ.மீ மழை பெய்துள்ளது.
மதுரை, மானாமதுரை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பெய்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உப்பளங்கள் மூழ்கின:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான உப்பளங்கள் மழை நீரில் முழ்கின. இதையடுத்து உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரி்த்தது. தாமிரபரணி மற்றும் கொப்பறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
களக்காடு சேரன்மகாதேவி சாலையில் பாலம் சீரமைக்கும் பணி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக பஸ் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. கனமழையினால் களக்காடு அருகே பெட்டை குளம் உடைந்தது. இதையடுத்து அங்கு மணல் மூட்டைகளை கொண்டு வரப்ப்ட்டு உடைப்பு சரி செய்யப்பட்டது.
பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 240 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த அணை நீர்மட்டம் 67.65 அடியாகவும், சேர்வலாறு அணை 80.60 அடியாகவும், மணிமுத்தாறு அணை 79.80 அடியாகவும் உள்ளன.
இந்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவ்ட்டத்தில் உள்ள 20 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான உப்பங்கள் நீரில் முழ்கின.
இங்கு பதப்படுத்தப்பட்ட உப்புநீரோடு மழை நீரும் கலந்துவிட்டால், உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உப்பு விலை அதிகரிக்கும் என தெரிகிறது.