குமரியில் கேரள பெண் மகளுடன் தற்கொலை முயற்சி
குமரி: கணவன் விவகாரத்து நோட்டீஸ் அனுப்பியதால் மனமுடைந்த கேரள பெண் ஒருவர் கன்னியாகுமரி வந்து தனது மகளுடன் தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டார். தற்போது அவர்கள் இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மணல்தேரி சிலுவை நகர் கடற்கரையில் இன்று காலை ஒரு பெண்ணும், அவரது மகளும் வாயில் நுரைதள்ளியபடி மயங்கி கிடந்தனர்.
அப்போது அந்த பக்கமாக சென்றவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அவர்களை சேர்த்தனர். சுயநினைவின்றி இருக்கும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
35 வயது மதிக்கத்தக்க தாய் நீல கலரில் பூப்போட்ட சேலையும், நீல கலர் ரவிக்கையும் அணிந்துள்ளார். மகளுக்கு 13 வயது இருக்கும். பிரவுன், மஞ்சள் கலந்த சுடிதார் அணிந்து இருந்தார். அவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.
அவர்கள் வைத்திருந்த பையில் மலையாளத்தில் எழுதப்பட்ட கடிதமும், விவாகரத்து கேட்டு அவரது கணவர் அனுப்பியிருந்த வக்கீல் நோட்டிசும் இருந்தது. அதிலிருந்து அந்த பெண்ணின் பெயர் கீதாவாக இருக்கலாம் என்றும், அவரது கணவர் பெயர் சுரேஷ் என்றும், அவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் யூகிக்கப்பட்டுள்ளது.
விவாகரத்து காரணமாக அந்த பெண் இங்கே வந்து மகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குமரி சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் விசாரணை நடத்தியதில் அவரது பெயர் சசிகலா, திருவனந்தபுரம் என்றும் தெரியவந்தது.